இயேசு இஸ்ரவேலருக்கு மட்டுமே ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற வாதம்

இயேசுவின் ஊழியம் இஸ்ரவேலருக்கு மட்டுமே, கிறிஸ்தவர்கள் நினைப்பது போல அது எல்லா மனிதர்களுக்குமானது அல்ல என்று சில இஸ்லாமியர் வாதிடுகின்றனர். இந்த வாதத்தின் அடிப்படையில், முஹம்மது மட்டுமே எல்லா காலத்திற்கும், அனைத்து மக்களுக்குமான உலகளாவிய நபியாக வந்தார் என்று முஸ்லிம்கள் கூறுவதில், அவர்கள் கிறிஸ்தவர்களை முஹம்மதுவைப் பின்பற்றுபவர்களாக மாற்ற முயற்சிக்கின்றனர். தங்களின் கூற்றுக்கு ஆதரவாக, இந்த இஸ்லாமியர்கள் பின்வரும் புதிய ஏற்பாட்டு வசனங்களை உடனே எடுத்துக் காட்டுகின்றனர்:

இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். மத்தேயு 10:5-6

அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். மத்தேயு 15:24

ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு என்பவர்களின் வம்சத்தில் இயேசு பிறந்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்வது முக்கியமானது ஆகும். அனேக நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலாக அவர் இருந்தார். தேவனுடைய சித்தத்துக்குக் கீழ்ப்படிதல் மற்றும் ஒப்புக் கொடுத்தலின் நிமித்தம் ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தமானது இரண்டு தன்மைகளை உடையதாக இருந்தது. முதலாவதாக, ஆபிரகாமின் சந்ததியான ஈசாக்கு, யாக்கோபு மற்றும் இஸ்ரவேலின் பிள்ளைகளை (சந்ததியினர்) ஆசீர்வதிப்பதாக வாக்களித்தார். இரண்டாவதாக, ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு எனும் அந்த வம்சத்தில் அனைத்து தேசத்தாருக்கும், அதாவது அனைத்து மக்களுக்குமான ஆசீர்வாதத்தை எழுப்புவேன் என்று வாக்களித்தார். (பார்க்க: அப்போஸ்தலர் 3:25-26 மற்றும் கலாத்தியர் 3:8,14).

ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தத்தில், இஸ்ரவேலரின் சந்ததியினரும், புறஜாதியாரும் (இஸ்ரவேலர் அல்லாதோர்) ஆகிய இருவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும். இது அனேக நூற்றாண்டுகளுக்குப் பின்பு இயேசு பிறந்தபோது உறுதிப் படுத்தப்பட்டது. குழந்தை இயேசுவை அர்ப்பணிப்பதற்காக ஆலயத்திற்கு எடுத்துச் சென்றபோது, அங்கே ஜெபித்துக் கொண்டிருந்த பக்தியுள்ள வயது சென்ற ஒரு மனிதர் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு அங்கு வந்தார். அவர் தன் கைகளில் அந்தக் குழந்தையை ஏந்தி பின்வரும் வார்த்தைகளை தேவனிடம் ஜெபத்தில் சொன்னார்:

(1)புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், (2)உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். லூக்கா 2:30-32

மேற்கண்ட வேதபகுதியில் இருந்து, இயேசுவின் ஊழியமும் இரண்டு தன்மையுடையது என்பதை நாம் அறிகிறோம். முதலாவது, அவர் இஸ்ரவலரிடத்தில் பிறந்தபடியால், இஸ்ரவேலரிடம் தன்னையும் தேவனையும் வெளிப்படுத்துவது அவருடைய முதல் ஊழியமாக இருந்தது. அவர்கள் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்- ஆபிரகாம், ஈசாக்கும் மற்றும் யாக்கோபின் சந்ததியினர். குர்-ஆனும் இந்த வித்தியாசத்திற்கு சாட்சி பகருகிறது:

வலிமையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக! மறு உலகை நினைப்பதற்காக அவர்களைச் சிறப்பாக நாம் தேர்வு செய்தோம். ஸூரத்துல் ஸாத் (38):45-46

இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கிய அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்! ஸூரத்துல் அல்-பகரா (2):47

மிகவும் வருந்தத்தக்கதாக, இடைப்பட்ட காலத்தில் இஸ்ரவேலர் தேவனைப் பற்றிய காரியங்களில் கடினப்பட்டவர்களாகவும் வேறுபட்டவர்களுமாக மாறியிருந்தனர். இதன் விளைவாக, நீண்ட காலமாக இஸ்ரவேலர்கள் எதிர்பார்த்திருந்த ஆசீர்வதிக்கப்பட்டவரும், தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களை மீட்பதற்காக தேவனால் அபிசேகிக்கப்பட்டவருமான மேசியா, நானே என்று இஸ்ரவேலரிடம் உறுதிப்படுத்தும் படியாக, இயேசு அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் அவர்கள் மத்தியில் தனிப்பட்ட முறையில் ஊழியம் செய்வது அவசியமானதாக இருந்தது. இந்தக் காரணத்தினால் தான் அவருடைய தனிப்பட்ட ஊழிய காலத்தில், இயேசு தம் சீடர்களை இஸ்ரவேலரிடத்திற்கு மட்டுமே போகும்படி சொல்லி அனுப்பினார். அவர்கள் முதலாவது செய்தியைக் கேட்கவேண்டியதாயிருந்தது. அவர்கள் தேவ ஆசீர்வாதத்தைப் பற்றிய வாக்குத்தத்த உடன்படிக்கையின் மக்களாக இருந்த படியினால், இது அவர்களின் பாக்கியமாக இருந்தது. இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து, அவருடைய சீடர்களில் ஒருவர் இஸ்ரவேலரிடம் பின்வருமாறு பேசினார்:

நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள். அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான். அப்போஸ்தலர் 3:25-26

இயேசுவின் ஊழியத்தின் இரண்டாவது பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்வது மிக முக்கியமானது ஆகும். இந்த ஊழியமானது எல்லா மனிதரின் பாவங்களுக்கான பரிகார பலியாக அவர் தம் ஜீவனைக் கொடுப்பதாக இருந்தது. (1 தீமோத்தேயு 2:4-6). இது எல்லா தேசத்தவருக்குமான ஆசீர்வாதமாக இருந்தது. இயேசு சிலுவையில் பாடுபட்டு சிந்திய இரத்தத்தினாலே எல்லா மனிதரின் பாவங்களுக்கான தண்டனையைச் செலுத்தித் தீர்த்தார் என்ற நற்செய்தியே அந்த ஆசீர்வாதம் ஆகும். இந்த இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை ஏற்றுக் கொள்கிற எவருகுக்கும் தேவனுடன் நித்தியமான வாழ்வு உறுதியாக உண்டு எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து (அல்-மஸீஹ்) பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. லூக்கா 24:46-47

மேசியாவாகிய இயேசுவில் இந்த இரட்சிப்பு அனைவருக்கும், யூதருக்கும் மற்ற நாடுகளைச் சேர்ந்த அனைவருக்கும் இருக்கிறது என்பதை வேதவசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. இயேசு பூமியில் ஊழியம் செய்த நாட்களில், தம் சீடர்களை இஸ்ரவேலரிடம் மட்டுமே போகும்படி சொன்னார் என்பதை நினைவில் கொள்க. ஆனால் அவருடைய ஊழியத்தின் இரண்டாவது பகுதியை செய்து முடித்த பின் (ஒப்புரவாக்குதலின் தியாக சிலுவை மரணத்திற்குப் பின்), அப்பொழுது அவர் சீடர்களிடத்தில் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்:

நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, ….. மத்தேயு.28:19

இந்த வார்த்தைகளை இயேசு அறிவித்தபோது, அவர்தாமே தம் உலகலாவிய தன்மையை உறுதிப்படுத்தினார்:

நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான். யோவான் 8:12

மீண்டுமாக இயேசு தன்னை அனைத்து மக்களுக்குமான இரக்கத்தில் சிறப்பான ஆசீர்வாதம் அல்லது வெளிப்பாடு என குறிப்பிடுகிறார். குர்-ஆனும் இதேபோல இயேசுவின் உலகளாவிய ஊழியத்தைப் பற்றிக் கூறுகிறது. அல்லாஹ் கூறுவதாக பின்வருமாறு வருகிறது:

'அப்படித் தான்' என்று (இறைவன்) கூறினான். 'இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும் (ஆயத்-அல் லின்னாசி), நம் அருளாகவும் ஆக்குவோம்.... ஸூரத்துல் மர்யம் (19):21

கவனியுங்கள், ”இஸ்ரவேலருக்கு மட்டுமேயான அடையாளம்” என்று சில இஸ்லாமியர்கள் நம்புவது போல இங்கு இல்லை. உண்மையில் அரபியில் இந்த வார்த்தை ”அனைத்து மக்களுக்குமான அடையாளம்” என்று வருகிறது.

ஆங்கில மூலம்: The Claim that Jesus was a Prophet Only to Israel

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்