பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்

ஆசிரியர்: லூக் பிளாண்ட்

பாவமன்னிப்பு குறித்து என்னுடைய இஸ்லாமிய நண்பர்களுடன் பல விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அது குர்‍ஆனிலும் பைபிளிலும் முற்றிலும் மாறுபட்ட விதமாகக் காணப்படுகிறது. இந்தக்கட்டுரையில் தேவனின் மன்னிப்பு குறித்தும் அவரது மகிமை குறித்தும் என்னுடைய சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நாம் ஒருவரை ஒருவர் இவ்விதம் நடத்தும் போது அது விபரீதமானது. ஆனால், இந்த அவமதிப்பின் அளவு நாம் யாரை அல்லது எதை அவமதிக்கிறோம் என்பதைப் பொறுத்தது. நான் ஒரு படம் வரைய சிறிது நேரம் செலவழித்திருக்கும் போது, அதனை ஒரு பெயிண்டினால் அழித்து விடுவீர்களானால், அது எனது படம் வரையும் திறனுக்கு அவமரியாதை செய்ததாகும். ஆயினும் லோவெர் அருங்காட்சியத்தில் சென்று மோனாலிசாவின் அசல் ஓவியத்தின் மீது பெயிண்டினைத் தெளித்து நாசமாக்கினால் அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும். எனவே, நம்மைப்போன்று அநித்தியமான படைப்புகளைப் போலன்றி, அளவற்ற நித்தியமான பரிபூரணப் படைப்பாளீயின் படைப்பினைக் கருத்தில் கொள்ளும்போது நாம் செய்யும் குற்றம் எத்துனை பெரியது! நாம் பாவம் செய்யும்போது, அளவில்லா முக்கியத்துவம் வாய்ந்த கடவுளை அவமதிக்கிறோம். எனவே இந்த அவமதிப்பும் அவமரியாதையும் அளவற்றது.

மேலும் இத்தகைய அவமதிப்பின் அளவு நாம் அவமதிக்கின்ற நபரைப் பொறுத்தது மட்டுமின்றி அவரோடு நமக்கு உள்ள உறவைப் பொறுத்தும் மாறுபடும். முற்றிலும் அறிமுகமற்ற ஒரு நபரை அவமதித்து துக்கப்படுத்துவது சிறிய அளவு பாதிப்பை உண்டாக்கும், ஆனால் நம்மோடு ஏற்கனவே நல்லுறவில் உள்ள ஒருவரை அவமதித்து துக்கப்படுத்துவது, அதிலும், அவர் நம் குடும்ப உறவினாராக இருக்கும் பட்சத்தில் இது பன்மடங்கு வெட்கத்திற்குரியது, பாதிப்பும் அதிகமாக இருக்கும். நாம் செய்யும் அனைத்துக் காரியங்களும் நம் குடும்பத்தின் சார்பாகவே செய்ததாகக் கருதப்படும். அவர்கள் நம்மிடம் பொறுப்புணர்ச்சியையும் தரமான நடத்தையையும் எதிர்பார்ப்பது இயல்பு. எனவே நாம் இரு வழிகளில் நமது குடும்பத்தினை அவமதிப்புக்குள்ளாக்குகிறோம். முதலாவது நாம் முகத்திற்கு எதிரே அவர்களை தூஷிக்கிறோம், இரண்டாவது, அவர்கள் இல்லாதிருக்கும் போது கூட நமது குடும்ப நற்பெயரை களங்கத்திற்குள்ளாகுகிறோம்.

தேவனைப் பொறுத்தமட்டில், நாம் அவரது சாயலாகவே படைக்கப்பட்டிருக்கிறோம். அதாவது, நமக்கு அறிவுபூர்வமான ஒரு உருவம் உண்டு. இவ்வுலகத்தில் அவரது பிரதிநிதிகளாக, ராஜரீகமாக தேவனைப் போன்று செயல்படும்படி எதிர்பார்க்கப்படுகிறோம். (ஆதியாகமம்: 1:26-28). இந்த அர்த்தத்தில், உவமானமாக நாம் அவரின் பிள்ளைகள். (அப்:17:28). தேவன் நாம் அவரின் குடும்ப உறுப்பினருள் ஒருவராகச் செயல்பட விரும்புகிறார். ஏதேன் தோட்டத்தில் ஆதாமுடனும் ஏவாளுடனும் அவர் சஞ்சரித்ததாக நாம் வாசிக்கிறோம். (ஆதியாகமம்: 3:8). தேவனோடு ஒரு வியத்தகு உறவினை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர். மனிதர்களாய் நாம் படைக்கப்பட்டதில் நமக்கு எத்துணை அதிசயிக்கத்தக்க உயர்வு பாருங்கள்!

நாம் தேவனுக்குக் கீழ்படியாதபோது நாம் இரு வழிகளில் அவரைச் சிறுமைப்படுத்துகிறோம். முதலாவது அவரது கட்டளைகளை அலட்சியம் செய்து ஒரு தகப்பனாக நம்மீது அவர்பொழிந்த அன்பினைப் புறக்கணித்து ஆதாம் ஏவாளைப் போன்றே அவரது முகத்திற்கெதிரே அவரை அவமதிக்கிறோம். இதனால் ஏனைய உலகிற்கு ”தேவனின் பிள்ளைகள் அவர் வெட்க்கப்படும் விதத்தில் நடந்தார்கள்” என்ற செய்தியை பிரகடணம் செய்கிறோம்.

தேவனுக்கு எதிரான நமது பாவங்கள் எவ்வாறு உள்ளன என்று காண்போமாகில், அது ஒரு இளவரசன் தன் தந்தையாகிய அரசனிடம் சென்று பலர் முன்னிலையில் நன்றிகெட்டவிதமாக வெறுப்புடன் அவர் முகத்தில் காறி உமிழ்வது போன்றே உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், தேவன் என்ன செய்வார்? நாம் அவரை வெட்கப்படுத்தியதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பாரா? இல்லை, இந்த அவமரியாதை தண்டனைக்கு உரியது. இதற்குச் சரியான நடவடிக்கை ஒரு மிகப் பெரிய தண்டனை – நரகத்தின் நித்திய ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தலேயாகும்.

ஒருவர் முஹம்மதுவின் படத்தை அவர் அவமரியாதைப்படும்படி வரைந்தால் இஸ்லாமியர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த அவ மரியாதை குறித்து ஒன்றும் செய்யாமல் அவர்கள் சும்மா இருப்பார்களேயானால் அது சரிதான் என்ற தகவலை இந்த உலகிற்குத் தெரிவிப்பது போன்றாகிவிடும். இதன் பொருட்டே, இஸ்லாமியர்கள் முகமதுவிற்கு எதிரான எந்த அவமதிப்பையும் ஏதாவது செய்யாமல் விடுவதில்லை. அவரை அவமதிப்பிற்குள்ளாக்குவது விபரீத விளைவுகளுக்குள்ளாகும் எனக் காண்பிப்பதே இதன் நோக்கம்.

ஆனால் முஹம்மதுவை விடப் பன்மடங்கு உயர்ந்தவராகிய தேவனின் காரியம் என்ன? தேவன் அவரை அவமதித்தவர்களை ஒன்றுமே செய்யாமல் இந்த அவமரியாதையை மன்னித்து விடுவாரேயானால், அது அவர்கள் செய்தது சரிதான், அவர் குப்பையைப் போன்று ஒதுக்கத்தக்கவர்தான், அவரை யாரும் அவமதிக்கலாம், அவ்ர் ஒன்றும் முக்கியமானவரல்ல, என்ற அறிக்கையை உலகிற்குத் தெரிவிப்பது போலாகும். தேவன் எப்போதாவது இவ்விதம் சொல்வாரா?

மனிதர்கள் எவ்விதமான சந்தர்ப்பங்களில் தங்களுக்கு உண்டாகும் நிந்தைகளையும் அவமானங்களையும் ஒன்றும் செய்யாமல் சகித்துக்கொள்வார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்கமுடியும்:

  1. ஒன்றும் செய்ய இயலாத நிலையில், அதாவது நாம் அதைச் சரி செய்யப் பெலனற்று இருக்கும்போது நாம் சும்மா இருக்க முற்படலாம். ஆனால், தேவனுக்கு அப்படிப்பட்ட நிலை ஒருபோதும் இல்லை, ஏனெனில் அவர் சர்வ வல்லவர்.
  2. அல்லது மற்றவர்களுக்கு நான் இதைவிடப் பெரிய கொடுமைகளைச் செய்திருக்கிறேன், எனவே பழிவாங்கும் உரிமை எனக்கு இல்லை என நான் உணரும் பட்சத்தில். மீண்டும், தேவனுக்கு இது பொருந்தாது, ஏனெனில் அவர் எப்பொழுதும் முற்றிலும் சரியானதையே செய்பவர்.
  3. அல்லது நான் சுயமரியாதையற்று இருந்தால் – அதாவது, ஏதொவொரு காரணத்திற்காக நான் எனது மனித மகிமையை இழந்துபோயிருந்தால், நான் ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்துவிடுவேன். ஆனால் தேவனின் மகிமை இதனினும் பண்மடங்கு உயர்ந்தது, அவர் நிச்சயமாகவே ஒருபோதும் அதை இழந்து போவதில்லை!
  4. அல்லது ஏதோவொரு முக்கியமான காரணத்திற்காக எனது சுயமரியாதையைப் பணையம் வைத்தால் பரவாயில்லை என நான் கருதினால், நான் ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்துவிடுவேன். ஆனால், மீண்டும், தேவன் எப்படி எண்ண வேண்டும் – அவரை விட அவருக்கு முக்கியமானது என்ன இருக்க முடியும்?

இல்லை, தேவன் அளவற்ற தன்மானம் மிக்கவர். ஒருவரும், தனக்கே உரித்தான தேவ மகிமையை எடுத்துக் கொள்ளவோ அவரை அவமதிக்கவோ விடாமல் பிடிவாதமாக இருப்பதில் எரிச்சலுள்ள தேவன் அவர். உபாகமம் 4:23-24 ல் அவர் இவ்வண்ணமாகச் சொல்கிறார்.

“நீங்களோ உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.”

ஏசாயா 42:8 இதை இவ்வண்ணமாய்ச் சொல்கிறது:

“நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.”

தானே மகிமைக்கும் கனத்திற்கும் உரியவர் என்பதில் தேவன் உறுதியாகவே இருக்கிறார். இது சரி தான். ஏனெனில், மெய்யாகவே, மிகவும் முக்கியமான, மிகவும் விலைமதிப்பற்றவர் அவர். ஆகையால், தனக்கு கிடைக்கவேண்டிய மகிமையை அவரே நிலை நிறுத்திக்கொண்டால் தான் அவர் மன்னிப்பார். அதே நேரத்தில், அவருக்கு எதிராக செய்யப்பட்ட பாவம் என்பது எவ்வளவு கொடுமையானது, தண்டிக்கப்படவேண்டியது, என்பதை காட்டிய பிறகே அவர் மன்னிப்பார்.

இது சாத்தியமா? ஆம், பிதாவாகிய தேவனும் குமாரனாகிய தேவனும் ஆகிய இருவரும் இவ்வண்ணம் தான் செய்கிறார்கள் என பைபிள் போதிக்கிறது.

பழைய ஏற்பாடு முழுவதிலும், நமது பாவங்களினால் ஏற்பட்ட அவமரியாதையை நிவர்த்திக்க பலியிடுதலின் அவசியத்தை தேவன் காண்பிக்கிறார். ஆயினும், ஒரு மாட்டினுடைய அல்லது ஒரு ஆட்டினுடைய உயிர் தேவனுக்கு நம்மால் இழைக்கப்பட்ட அவமரியாதையை நோக்கும்போது ஒன்றுமில்லை. எனவே பிதாவாகிய தேவன், நமது பாவம் எத்துனை கொடியது என்பதினை மிகச் சரியான நேரத்தில் மிகவும் அதிசயிக்கத்தக்க விதமாக- தனது ஒரே பேரான குமாரனை பலியாக ஒப்புக்கொடுத்தலின் மூலம் விளங்கப்பண்ணினார். (யோவான் 3:16). இது அவரின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலுண்டான அளப்பதற்கரிய நிவாரண பலியாகும். (எபிரேயர் 9:11-14, 1 பேதுரு1: 18-19)

குமாரன் தேவனுக்குரிய மகிமையைச் செலுத்தும் பொருட்டு இதைச் செய்ய முன்வந்தார். முதலாவதாக, தேவ குமாரன் பிதாவின் அளவிட முடியாத மதிப்பினை வெளிப்படுத்தும் விதமாக பரத்தின் தெய்வீக மகிமையை விட்டுவிட்டு ஒரு சாதாரண மனிதனாக, ஒரு ஊழியக்காரனாக இறங்கி வந்தார். அவ்விதம் ஒரு ஊழியக்காரனாக வாழ்ந்தது மட்டுமின்றி ஒரு குற்றவாளியினைப் போன்று தேவ ஆக்கினையைச் சுமந்து கேவலமான முறையில் மரணத்தை எதிர்கொண்டார். (பிலிப்பியர் 2:5-8) இவை அனைத்தையும் பிதாவுக்கு மகிமை உண்டாகும்படிக்கு இயேசு ஏற்றுக்கொண்டார். (யோவான் 17:4)

இத்தகைய முறையில் தானே தேவன் பாவங்களை மன்னிக்கிறார்- நமக்கு உரித்தான அவமானங்களை இயேசு ஏற்றுக்கொண்டு அவருக்குரிய மகிமையை நமக்கு அளிக்கிறார். அதே நேரத்தில் தேவன் தமக்கு உரிய தமது மகிமையை விட்டுக்கொடுப்பதில்லை. பிதாவானவர் அளவற்ற இந்த பலியினால், தமக்கெதிரான பாவங்களும் அளவற்றவையே எனக் காண்பிக்கிறார். குமாரன் தமது அன்பினாலும் கீழ்படிதலினாலும் தம்மை நரகத்திற்கிணையான பாதையில் செல்ல ஒப்புக்கொடுத்ததினால் பிதாவின் உண்மையான மதிப்பினையும் நாம் எவ்விதம் அவரிடம் நடந்துகொள்ள வேண்டும் எனவும் காண்பிக்கிறார்.

குர்‍ஆன் காண்பிக்கும் கடவுள், இவ்விதம் செயல்படுவதில்லை. அவர் மன்னிக்கும்போது, நாம் அவர்மீது குவித்த அவமரியாதைகள் குறித்து அவர் ஒன்றுமே செய்வதில்லை. இறுதி நாளில், அவருக்கு நேரிட்ட அவமரியாதையைவிட, மனுஷர்களும் மனுஷிகளும் சொர்க்கத்தில் அனுபவிக்கும் உடல் சுகத்தை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி, அவர்களுடைய குற்றங்களை அலட்சியம் செய்கிறார். ஒரு கிறிஸ்தவனுடைய பார்வையில், இவ்விதம் செயல்படுகின்ற ஒரு கடவுள், ஒரு மனிதனின் மனதில் உருவான கற்பனையாகவே காணப்படுகிறார். ஏனெனில், மனித மனங்கள் மட்டுமே கடவுளின் மரியாதையை விட, தான் மன்னிக்கப்பட்டு பரலோகம் செல்வதை அதிமுக்கியமானதாகக் கருதும். உண்மையில், நாம் கூட இவ்வண்ணமாகவே நினைக்கிறோம். ஆதாம் ஏவாள் தொடங்கி தேவனைக் கனப்படுத்துவதைவிட நமது ஆசைகளையே முன்னிலைப் படுத்துகிறோம். எனவே தான் மனிதர்கள் நமது மரியாதைக்குப் பாத்திரமான விதத்தில் உள்ள கடவுளைவிட, சுய மரியாதையற்ற கடவுளைக் கண்டுபிடிக்கவே விரும்புகிறார்கள் எனக் காண்கிறோம்.

ஆனால், பைபிள் காண்பிக்கும் தேவன், தனது மகிமையில் உறுதியுடன் நிலை நிற்கிறார். அவர் அவ்விதம்தான் செயல்படுவார். ஆயினும், அவர் நம் மீது கொண்ட எண்ணிமுடியாத மகத்தான தம் அன்பினால் தமது மகிமைக்குச் சிறிதளவும் பாதகம் ஏற்படாத வகையில் நம்மையும் மேன்மைப்படுத்துகிறார்.

கிறிஸ்தவர்கள் முழு மன்னிப்புப் பெற்றும்கூட மேற்கொண்டு தம் மனம் போனபடி வாழ முற்படாமல் இருப்பதற்கு சிலுவைதான் காரணம். தேவன் வழங்கும் பாவமன்னிப்பு ஆச்சரியமானது, நித்தியமானது. அதில் முழு சுதந்திரம் உண்டு. எனது அனைத்துப் பாவங்களும், நான் பின் நாட்களில் செய்யக்கூடிய பாவங்கள் உள்பட, எனக்கு மன்னிக்கப்பட்டன என்பதை நான் அறிவேன். ஆயினும், நான், ” நல்லது, என் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன, இனி நான் என் மனம்போன போக்கில் வாழலாம்” என எண்ணிக்கொள்ள முடியாது. ஏனெனில், இயேசு, தேவனுக்கெதிரான பாவங்கள் அவரை அளவிடமுடியாத அவமானத்திற்குள்ளாக்குகின்றன என்பதினைத் தெளிவாகக் காட்ட, அளவிட முடியாத ஒரு விலைக் கிரையத்தைச் சிலுவையின் வழியாகச் செலுத்தியிருக்கிறார். நரகத்தின் நினைவை விட, இந்த உணர்வு தான், தேவனை நேசிக்கும் ஒரு கிறிஸ்தவனுக்கு, பாவத்திலிருந்து விலக அதிகமாக ஊக்குவிக்கும்.

(இந்த கட்டுரையை எழுத மிகவும் ஊக்கமளித்த ரோலண்ட் முல்லர் என்பவரின் "கனம் மற்றும் அவமானம்" என்ற புத்தகத்திற்காக அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.)

ஆங்கில மூலம்: Forgiveness and Honour in the Bible and the Qur'an

ஆசிரியர் லூக் பிளாண்ட் அவர்களின் இதர கட்டுரைகள்