இயேசு, தேவனின் தன்னிகரற்ற குமாரன்
JESUS IS THE UNIQUE SON OF  GOD
ஆசிரியர்: சைலஸ்
அறிமுகம்:
"தேவ குமாரன் (இறைக்குமாரன்)" என்ற சொற்றொடர் பைபிளில் பல முறை  வருகிறது. இவ்வார்த்தை பல நபர்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த  சொற்றொடர் இயேசுவிற்கு பயன்படுத்தப்படும் போது மட்டும், இதற்கு தனிப்பட்ட பொருள்  உண்டு. கிறிஸ்து யார்? அவர் எவ்விதம் மற்றவர்களை விட வித்தியாசமானவர், பிதாவாகிய  தேவனோடுள்ள அவரது உறவு எப்படிப்பட்டது என்பதை இந்த சொற்றொடர் மூலமாக  அறிந்துக்கொள்ளலாம். 
பைபிளில் அனேகர் "தேவ குமாரர்கள்" என்று அழைக்கப்பட்டு  இருப்பதினாலே, இயேசுவும் தன்னை தேவகுமாரன் என்றுச் சொல்லும் போது, அது மற்றவர்களை  குறிப்பது போல பொருள் கொள்ளவேண்டும் என்று இஸ்லாமியர்கள் நினைக்கிறார்கள். அதாவது  மற்றவர்களைப் போல, இயேசுவும் இறைக் குமாரன் என்று அழைப்பதற்கு காரணம், அவர் நல்ல  செயல்களைச் செய்தார், இறைவனை மகிமைப்படுத்தினார், மற்றும் தாழ்மையுள்ளவராக  இருந்தார் இன்னும் பல நற்செயல்களைச் செய்தார். ஆக, நல்ல செயல்கள் செய்யும்  மனிதர்களை எப்படி தேவகுமாரர்கள் என்றுச் சொல்கிறோமோ, அது போலவே, இயேசுவும் இந்த  வகையில் “தேவகுமாரன்” என்று அழைக்கப்பட்டார் என்று இஸ்லாமியர்கள் முடிவு செய்துக்  கொண்டுள்ளார்கள். இஸ்லாமிய போதனையின் படியும், இஸ்லாமியர்களின் படியும், இயேசு  தேவனின் தனிச்சிறப்பு மிக்க குமாரன் இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.  
இஸ்லாமிய விவாதம் புரியும் ஒரு இஸ்லாமியர், யோவான் 10ம் அதிகாரம் பற்றி  கீழ்கண்டவாறு கூறுகிறார்: 
"இயேசுவும் ‘தேவகுமாரன்’ என்பதை ஒரு உருவகமாகவே பேசியுள்ளார், இதனை உருவகமாக எடுத்துக்கொள்ளாததினாலே, கிறிஸ்தவ சபை தங்கள் மத அடிப்படையை தகர்த்து இருக்கிறது" [அலி, த ரெலிஜியன் ஆஃப் இஸ்லாம், பக்கம் 40]
இந்த சொற்றொடர் பற்றி பைபிளில் வரும் வசனங்கள் பற்றி நாம்  அலசுவதற்கு முன்பாக, ஒரு விவரத்தை நாம் சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும், அதாவது,  இந்த சொற்றொடர் குறிப்பிடப்படும் இடத்தில் வரும் இதர வசனங்களைப் பொருத்து (Context)  இதன் அர்த்தம் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது, உதாரணத்திற்கு:  
"சரி, இப்போது நான் சாலையை அடிக்கும் நேரம் வந்துவிட்டது" என்று  நான் கூறினால், இதன் பொருள் என்ன? 
(If I say, "Okay, it's time for me to hit  the road", what does that mean?) 
அல்லது 
நான் எகிப்து நாட்டில்  இருக்கும் போது, "நான் இரும்புத் துண்டு மீது உள்ளேன்" என்றுச் சொன்னால்,  இதன் அர்த்தம் என்ன? 
(Or if I were in Egypt, and I said "I'm on a piece of  iron", what would that mean?) 
நான் கூடைப்பந்து விளையாட்டைப் பற்றி பேசும்  போது, மைகேல் ஜோர்டனிடம் "BAD" என்றுச் சொன்னால் இதன் அர்த்தம் என்ன? 
ஆக,  அனேக நேரங்களில், அவ்வார்த்தை சொல்லப்பட்ட இடம், சூழல் மற்றும் நேரம் போன்றவற்றைப்  பொருத்து மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். 
இயேசு தேவனின் "தனிச் சிறப்பான" குமாரன் என்பதற்கான ஆதாரங்கள்:
புதிய ஏற்பாடு, இயேசு, ஒரு "தனிச் சிறப்பான தேவ குமாரன்" என்றுச்  சொல்கிறதா? அல்லது இதர மக்களை உருவகமாக கூறுவது போல இவரும் ஒரு "தேவகுமாரன்" என்ற  தோரணையில் சொல்கிறதா? 
புதிய ஏற்பாட்டில் மிகவும் முக்கியமான மற்றும்  எல்லாருக்கும் தெரிந்திருக்கும் வசனம் யோவான் 3:16 ஆகும். இந்த வசனத்தில் இயேசு  தன்னைத் தானே தேவ குமாரன் என்று குறிப்பிடுகின்றார். 
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
"For God so loved the world that he gave his one and only Son that whosoever believes in him shall not perish but have eternal life." (John 3:16)
இந்த வசனத்தில் "ஒரே பேரான (one and only)" என்ற தமிழ் வார்த்தை  கிரேக்க மூல மொழியில் "monogenes" என்ற வார்த்தையாகும். இதன் பொருள் "ஒருவரே  பிறந்தார் (only born)" அல்லது "தனிப்பட்ட (sole)" என்பதாகும். "Vine’s Expository  Dictionary of N.T." என்ற புதிய ஏற்பாட்டு அகராதி, இதன் பொருளை இவ்விதமாக  கூறுகிறது, அதாவது "இது ஒரு புகழ்ச்சிக்குரிய மற்றும் ஒருமையைக் குறிக்கும்  வார்த்தையாகும்". 
"Strong Concordance" என்ற அகராதி கூறும் போது,  "Monogenes" என்ற இந்த வார்த்தையில் இரண்டு வார்த்தைகள் உள்ளன, அதாவது "Monos”  மற்றும் “ginomai" என்பதாகும். Monos என்றால், ஒரே பேரான (only) என்பதாகும்,  “ginomai" என்றால், "உருவாக்குதல், பிறத்தல், ஆகுதல், மனிதனாக வருதல்" என்பதாகும்.  
இதே வார்த்தை லூக்கா 7:12ல், ஒரு பையனை குறிக்கவும்  பயன்படுத்தப்பட்டுள்ளது: 
"அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்".
இந்த வசனத்திலும், "மோனோஜினஸ்" என்ற கிரேக்க வார்த்தை  பயன்படுத்தப்பட்டுள்ளது, இதன் பொருள் "ஒரே பேரான (only)" என்று மொழியாக்கம்  செய்யப்பட்டுள்ளது. 
இதே போல, லூக்கா 9:38ம் வசனத்திலும் இவ்வார்த்தை  பயன்படுத்தப்பட்டுள்ளது: 
அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருள வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.
இயேசுவிற்கு கீழ்கண்ட வசனத்திலும் "மோனோஜினஸ்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது:
யோவான் 1:14 - அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
ஒரு நிமிடம் யோவான் என்ன சொல்கின்றார் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். இயேசுவின் மகியையும், மாட்சிமையையும் யோவான் எவ்விதம் குறிப்பிடுகின்றார் என்பதை கவனியுங்கள். இப்படிப்பட்ட ஒரு புகழ்ச்சி ஆதாமுக்கு கிடைக்கவில்லை. தாவீதும் புகழப்பட்டாரே ஒழிய ஆனால், இயேசு புகழப்பட்டது போல இந்த அளவிற்கு அவர் புகழப்படவில்லை. இயேசு மட்டுமே இந்த மகிமையும், புகழ்ச்சியும் பெற்றார். மேலும், "Vine’s Expository Dictionary of N.T." இந்த வசனம் பற்றி கூறும் போது, இந்த கிரேக்க வசனம் இயேசுவிற்கு சூட்டிய இந்த மகிமை அவருக்கு தேவனோடுள்ள தனிச்சிறப்பான உறவுமுறையை குறிக்கிறது என்கிறது.
யோவான் 1:18 "தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்".
இங்கு, இயேசு தேவனின் தன்னிகரற்ற குமாரராக இருந்து, பிதாவின்  மடியில் (Father's side) இருப்பதாக வெளிப்படுத்தப்படுகிறார். தேவனின் குமாரன் என்று  அழைக்கப்பட்ட வேறு யாரும் இப்படி பிதாவின் மடியில் இருப்பதாக  வெளிப்படுத்தப்படவில்லை. 
இதே போல, யோவான் 3:18 மற்றும் 1 யோவான் 4:9ம்  வசனங்களிலும் "மோனோஜின்ஸ்" என்ற வார்த்தை இயேசுவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.  
புதிய ஏற்பாட்டின் படி, எப்போதெல்லாம் இயேசு தேவகுமாரன் என்று  அழைக்கப்படுகின்றாரோ அப்போதெல்லாம், அவர் தேவனின் தன்னிகரற்ற குமாரன் என்று  பொருளாகும். தேவ குமாரன் என்ற முறையில் "மோனோஜின்ஸ்" என்ற வார்த்தை இயேசுவிற்கு  மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 
2) எபிரேயர் முதல் அதிகாரம் உண்மையில்  இயேசு யார் என்பதை விளக்குகிறது. இந்த முழு அதிகாரமும் இயேசுவின் தெய்வீகத்  தன்மையை விளக்குகிறது, உதாரணத்திற்கு வசனம் 3ஐ கூறலாம். 
இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலே தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்.
"The Son is the radiance of God's glory and the exact representation of his being, sustaining all things by his powerful word. After he had provided purification for sins, he sat down at the right hand of the Majesty in heaven." (Hebrew 1:3)
3) இயேசு பிலாத்துவிற்கு முன்பு கொண்டு வரப்பட்டபோது, யூதர்கள் இவ்விதமாக கூறினார்கள்:
"யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்." (யோவான் 19:7)
இயேசு வெறும் உருவகமாக தன்னை தேவகுமாரன் என்று கூறியிருந்தால்,  யூதர்கள் அவரை "தேவதூஷணம் சொன்னான்" என்றுச் சொல்லி குற்றப்படுத்தி  இருக்கமாட்டார்கள் [தேவதூஷணத்திற்கு தண்டனை மரணதண்டனையாகும், பார்க்க  லேவியராகமம் 24:16]. யூதர்களுக்கு சங்கீதம் 82:6ம் வசனம் பற்றி நன்றாகத் தெரியும்.  ஒருவன் உருவகமாக தன்னை தேவனின் குமாரன் என்றுச் சொன்னால், யூதர்களுக்கு எந்த  பிரச்சனையும் இல்லை, அவனை அவர்கள் தொந்தரவு செய்யமாட்டார்கள். யூதர்கள் ஏன்  இயேசு மீது குற்றம் சுமத்தினார்கள் என்று கவனித்தால், அவர் தன்னை தன்னிகரற்ற,  நித்திய தேவனின் குமாரன் என்று சொன்னதினால் தான் அவர்கள் அவருக்கு தண்டனை  கொடுக்கவேண்டும் என்று விரும்பினார்கள். 
4) இயேசு மறுபடியும் தன்னை  தேவகுமாரன் என்று கூறுகிறார், மற்றும் இதன் மூலம் தன்னுடைய தன்னிகரற்ற  குமாரத்துவத்தை வெளிப்படுத்தினார், மத்தேயு 11:27: 
சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.
கிறிஸ்து, யோவான் 5:22ல் தன்னை தேவனுடைய குமாரன் என்று மறுபடியும் கூறுகிறார், மற்றும் கீழ்கண்டவாறு விளக்குகிறார்:
அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
5) இயேசு, மத்தேயு 21:33-43ம் வசனங்களில், குத்தகைக்காரன் பற்றிய  ஒரு உவமையை கூறினார். இந்த உவமையில் அந்த தோட்டத்தின் எஜமான் கடைசியாக தன் மகனை  அந்த குத்தகைக்காரனிடம் அனுப்பி, தனக்கு வரவேண்டிய பாகத்தை வாங்கிக்கொண்டு வரும்  படி அனுப்புகிறார். அந்த குத்தகைக்காரனும் அவனது வேலைக்காரர்களும், இந்த எஜமான்  அனுப்பிய அனேக வேலைக்காரர்களை தாக்கி சிலரை கொன்று விடுகின்றனர். கடைசியாக, அந்த  எஜமானின் மகன் வந்த போது, அவனையும் கொன்றுவிடுகின்றனர். 
இந்த உவமையின்  பொருள் என்னவென்றால், தேவன் அனேக தீர்க்கதரிசிகளை இஸ்ரவேல் மக்களிடத்தில்  அனுப்பினார், இஸ்ரவேல் மக்கள் நீதியின் கனிகளை தரும்படி அழைக்க வேண்டி  தீர்க்கதரிசிகள் வந்தார்கள். ஆனால், வந்த தீர்க்கதரிசிகளை அவர்கள் தாக்கி,  அவமானப்படுத்தினார்கள். கடைசியாக, தேவன் தன் குமாரராகிய கிறிஸ்துவை அனுப்பினார்,  அவரையும் யூதர்கள் கொன்றார்கள். இந்த உவமையின் மூலமாக, இயேசு தன் எதிர்கால சிலுவை  மரணத்தைப் பற்றி கூறினார். 
இந்த உவமையில் கூறப்பட்ட விவரத்தை கவனமாக  பாருங்கள். அந்த எஜமானனுக்கு இருந்த இதர வேலைக்காரர்களை விட வித்தியாசமான உறவை  இயேசு கொண்டுள்ளவர் என்பதைக் காட்ட தன்னை "குமாரன்" என்று கூறினார். இந்த உவமையின்  படி, அந்த எஜமான அனுப்பிய வேலைக்காரர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தார்கள், ஆனால்,  கடைசியாக வந்தவர் "மகனாக" இருந்தார். 
இயேசு தன்னிகரற்ற தேவகுமாரன் என்பதை  புதிய ஏற்பாட்டில் இன்னும் அனேக வசனங்கள் உண்டு. இயேசு தேவனின் தன்னிகரற்ற குமாரன்  என்பதை நிருபிப்பதற்கு மேலே நாம் பார்த்த எடுத்துக்காட்டு வசனங்களே போதும்.  
தங்கள் வாதத்தை நிலைநாட்ட முயற்சி எடுக்கும், இஸ்லாமியர்கள்  முன்வைக்கும் வசனங்கள்: 
இங்கு, இஸ்லாமியர்கள் தங்கள் பொதுவான  வாதங்களுக்கு ஆதாரமாக பயன்படுத்தும் வசனங்களை இங்கு பார்ப்போம். [இஸ்லாமியர்களின்  கேள்விகளும், எனது பதில்களும் கீழே தரப்படுகிறது]. 
கேள்வி 1: இயேசு  "மனுஷ குமாரன்" என்று அழைக்கப்பட்டார். இதன் பொருள் அவர் ஒரு வெறும் மனிதன்  என்பதாகும். இயேசுவும் தன்னை அடிக்கடி "மனுஷ குமாரன்" என்று அழைத்துக்கொண்டார்  (உதாரணத்திற்கு மத்தேயு 8:20). 
பதில் 1: "மனுஷ குமாரன்" என்ற  சொற்றொடர், தானியேல் 7:13ம் வசனத்தில் சுட்டிக்காட்டப்படும் "மனுஷ குமாரன்" என்ற  மேசியாவை (மஸிஹாவை) குறிப்பதாகும். குர்ஆன் கூட இயேசுவை மஸிஹா என்று அழைக்கிறது  (குர்ஆன் 3:45 ஐ பார்க்கவும்). 
கேள்வி 2: பலர் தேவனின் குமாரர்கள்  என்று இயேசு கூட சொல்லியுள்ளார்: 
யோவான் 10:34-36ம் வசனங்களில், இயேசு  இவ்விதமாக கூறினார்: "தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள்  வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?" (பார்க்க சங்கீதம் 82:6). தேவவசனத்தைப்  பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும்  தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும்  இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய்  என்று நீங்கள் சொல்லலாமா? 
பதில் 2: பழைய ஏற்பாடு, மக்களை தேவர்கள்  அல்லது தேவ குமாரர்கள் என்றுச் சொல்வது அவர்கள் தேவனுடைய பிரதிநிதியாக  இருக்கிறார்கள் என்பதால் தான் என்று இயேசு இங்கு குறிப்பிடுகிறார். இந்த இடத்தில்,  இயேசு தன்னையும் சேர்த்து தான் இப்படி உருவகமாக "தேவனுடைய குமாரர்" என்றுச்  சொல்கிறார் என்று இஸ்லாமியர்கள் பொருள் கூறுகிறார்கள். ஆனால், இயேசு தன்னைப் பற்றி  பேசும் போது, தனக்கும் பிதாவிற்கும் இடையே இருக்கும் உறவுமுறையைப் பற்றி பேசும்  போது, அவரது தனித்தன்மை வாய்ந்த "குமாரத்துவம்", உருவகமாக சொல்லும்  குமாரத்துவத்தைக் காட்டிலும் உயர்ந்தது, சிறந்தது என்று கூறுகிறார்.  
கேள்வி 3: அனேகர் தேவனின் சேஷ்டபுத்திரர்கள் (மூத்த குமாரர்கள்) என்று  அழைப்பட்டுள்ளார்கள். இதே நிலையில் தான் இயேசுவும் அழைக்கப்பட்டார் என்று நாம்  கருதலாம் அல்லவா? 
பதில் 3: ஒருவரை சேஷ்டபுத்திரன் என்று அழைத்தால்,  அதில் அனேக விவரங்கள் உள்ளடங்குகின்றன. யூத சட்டத்தின் படி ஒருவர் " சேஷ்டபுத்திரன்  (மூத்த மகன்)" என்று அழைத்தால், அவனுக்கு பரம்பரை சொத்தில் சிறப்பான பாகம்  கிடைக்கும், அதாவது மற்ற மகன்களுக்கு கிடைக்கும் பாகத்தைவிட, இரண்டு மடங்கு அதிகமான  சொத்து கிடைக்கும். அதே போல, தன் தந்தை இல்லாத காலங்களில் அல்லது மரணித்த பிறகு,  அந்த குடும்பம் அனைத்திற்கும் இந்த மூத்த மகனே ஒரு ஆசாரியனாக (ஆன்மீக தலைவனாக)  செயல்படுவான் (இந்த முறை லேவி என்ற வம்சத்திற்கு ஆசாரியத்துவம் (தேவாலய வேலைகள்  செய்ய அனுமதி) கொடுத்த பிறகு, நிறுத்தப்பட்டுவிட்டது.) 
பழைய ஏற்பாட்டில்  "மூத்த குமாரன்" என்பது உருவகமாக கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏசாயா 14:30ம்  வசனத்தில் வரும் "தரித்திரரின் தலைப்பிள்ளைகள்" என்ற சொற்றொடர், யாரை குறிக்கிறது?  இது ஏழைகள் எல்லாரிலும் அதிக ஏழையாக இருக்கும் நபர்களைக் குறிக்கிறது. யோபு 18:13ம்  வசனத்தில் "மரணத்தின் மூத்தமகன்" என்றுச் சொல்வது, எதனை குறிக்கிறது? அது  யோபுவிற்கு வந்த அந்த பயங்கரமான வியாதியைக் குறிக்கிறது. (தமிழாக்கத்தில் இந்த  வியாதியை பயங்கரமான மரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது). இந்த இடத்தில், இந்த  சொற்றொடர் சொல்லப்பட்ட இடத்தையும், சூழ்நிலையையும் பொருத்து அர்த்தம் மாறுகிறது  என்பதை கவனிக்கவும். 
இயேசு "சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் -  First born over all creation" என்று அழைக்கப்படுகிறார் (கொலோசெயர் 1:15). இந்த  அதிகாரம் அனைத்திலும், இயேசுவின் முக்கியத்தும், அவரின் ஆதிகால மேன்மை மற்றும்  எல்லா படைப்பிற்கும் மேலுள்ள சர்வாதிகாரம் போன்றவைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன,  ஏனென்றால், எல்லா படைப்பும் அவர் மூலமாக உண்டானது (பார்க்க வசனம் 16).  
கேள்வி 4: யாத்திராகமம் 4:22,23 - "அப்பொழுது நீ பார்வோனோடே  சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.  எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை  விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன்  என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்". 
இந்த வசனங்கள்,  இஸ்ரவேல் மக்கள் கூட தேவனின் "சேஷ்ட (மூத்த) குமாரர்கள்" என்று சொல்வதாக  தெரியவில்லையா? 
பதில் 4: தேவன் இஸ்ரேல் மக்களை தன்னுடைய சேஷ்ட  புத்திரர்கள் என்று கூறுகிறார், ஏனென்றால், அவர்கள் தேவனால்  தெரிந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் என்பதினால் தான். ஆபிரகாமின் சந்ததிகளை  குறித்து தேவன் வாக்கு செய்தார், அந்த சந்ததிகளை எகிப்திலிருந்து விடுதலை  அளிப்பதற்கு அனேக அற்புதங்களைச் செய்துக்காட்டினார், மற்றும் இஸ்ரவேல் என்ற  புதிய நாட்டை உருவாக்கி தன் மூத்த குமாரனாகிய இஸ்ரவேலுக்கு அளித்தார்.  
மேலும் விளக்கத்திற்கு ஓசியா 11:1ம் வசனத்தை கவனிக்கவும், "இஸ்ரவேல்  இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை  வரவழைத்தேன்". 
இந்த வசனத்தில் இஸ்ரவேல் நாட்டை தன் குமாரன் என்று  அழைக்கிறார். இதே போல அனேக வசனங்கள் உண்டு. இந்த இடத்தில், தனக்கும் இஸ்ரவேல்  மக்களுக்கும் இடையே இருக்கும் உறவுமுறையை உருவகமாக கூறுகிறார். 
கேள்வி  5: 2 சாமுவேல் 7:14 - "நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக்  குமாரனாயிருப்பான்;" இந்த வசனத்தில் தேவன், நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன் என்று  கூறியுள்ளார். இயேசுவும் இதே நிலையில் வருகிறார் அல்லவா? அதாவது ஒருவர் தேவனின்  பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் இருந்தால், அவர் தேவனின் குமாரன் என்று  அழைப்படலாம் அல்லவா? 
பதில் 5: இந்த வசனம் இடம்பெற்ற அனைத்து  வசனங்களையும் படிக்கவும். பதினோராவது வசனத்திலிருந்து பதினேழாவது வசனம் வரை  படித்துப்பாருங்கள். தேவன் "நான் பிதாவாக இருப்பேன்" என்றுச் சொல்கிறார்,  அப்படியானால், குமாரன் யார்? இந்த மொத்த வசனங்களையும் படிக்கும்போது, "குமாரன்"  என்பது தாவீதுக்கு வரப்போகும் காலங்களில் பிறக்கும் வம்சத்தைக் குறிக்கிறது. இந்த  வார்த்தைகள் சொல்லப்படும் போது, சாலோமோன் இன்னும் பிறக்கவில்லை, அதாவது அவர்  கர்ப்பத்திலும் இல்லை. எல்லா வசனங்களையும் பார்க்கும்போது, சாலோமோன் மட்டுமல்ல,  தாவீதின் சந்ததியில் பிறக்கும் அனைத்து ஆட்சி செய்யும் நபர்கள் அனைவரும் தேவனின்  குமாரர்கள் தான். அதாவது, இந்த வசனங்களில் அவர் கொடுப்பேன் என்றுச் சொன்ன தண்டனைகள்  அனைத்தும், சாலொமோனுக்கு மட்டுமல்ல, அவனுக்கு பின்பாக வரும் அனைத்து தாவீதின் வம்ச  அரசர்களுக்கும் தான். 
தேவன் தாவீதோடு ஒரு தனிப்பட்ட வாக்குறுதியை செய்தார்,  இந்த வாக்குறுதியை தாவீதின் வம்சங்களோடு நிலை நிறுத்துவேன் என்று கூறினார். இந்த  இடத்திலும்,அவர் உருவகமாக தாவீதின் அனைத்து வம்ச மக்களோடு உடன்படிக்கை  செய்துக்கொண்டதாக, உறவுமுறையை கொண்டுள்ளதாக கூறிகிறார் (இதன் விளக்கத்தை இங்கு  படிக்கவும் - சங்கீதம் 89:26-37). 
இயேசுவும் தாவீதின் வம்சத்தில் பிறந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது. 
கேள்வி 6: 1 நாளாகமம் 22:10 - "அவன் என்  நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்குக் குமாரனாயிருப்பான், நான்  அவனுக்குப் பிதாவாயிருப்பேன்; ..." 
இந்த வசனத்தில் கூறப்பட்டது போல,  இயேசுவிற்கும் இது பொருந்துமல்லவா? அதாவது தேவனின் பாதுகாப்பு மற்றும்  ஆசீர்வாதத்தின் கீழ் இருப்பவர்கள் தேவனுக்கு குமாரர்களாக தனிப்பட்ட உறவுமுறையை  உடையவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? இயேசுவும் இதே போல தனிப்பட்ட உறவுமுறையைக்  கொண்ட ஒரு நபி அல்லவா? 
பதில் 6: இந்த வசனம் 2 சாமுவேல் 7:14ம்  வசனத்தோடு சம்மந்தப்பட்டது. இதில் சொல்லப்பட்ட விவரம் குறிப்பிட்டு சாலொமோனுக்கு  (தாவீதின் குமாரன்) சொல்லப்பட்டது. ஒன்பதாம் வசனத்தின் கடைசி பாகத்தை பார்க்கும்  போது, "அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவேன்"  என்று தேவன் குறிப்பிட்டு சாலொமோனின் ஆட்சி காலத்தை குறித்துச் சொல்கிறார்.  
இந்த வசனம் குறிப்பிடும் சூழ்நிலையை கவனித்தால், இது சாலொமோனுக்கும்  தேவனுக்கும் இடையே இருக்கும் உறவுமுறையைக் குறிப்பிடுகிறது. சாலொமோன் தாவீதின்  குமாரன், மற்றும் சீக்கிரமாகவே இஸ்ரவேலுக்கு இராஜாவாக மாறப்போகிறார். அடுத்த  வசனத்தை (11) பார்க்கும்போது, தாவீது சாலொமோனை குமாரன் என்று அழைக்கிறார். மகன்  என்ற சொல்லின் அர்த்தம் புரியவேண்டுமானால், அந்த வசனம் சொல்லப்பட்ட சூழ்நிலையை  பார்க்கவேண்டும். 
கேள்வி 7: எரேமியா 31:9 - "...இஸ்ரவேலுக்கு நான்  பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்". 
இந்த  வசனத்தில் யாக்கோபு (இஸ்ரவேல்) மற்றும் எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரன் என்று  அழைக்கப்படுகின்றார்கள். இரண்டு பேர் எப்படி சேஷ்ட புத்திரராக இருக்கமுடியும்,  மற்றும் இயேசு மூன்றாவது சேஷ்டபுத்திரரா? 
பதில் 7: முதலில், தேவன்  இஸ்ரவேலுக்கு பிதாவாக இருக்கிறேன் என்றார். இந்த இடத்திலே எப்பிராயீம் இஸ்ரவேல்  நாட்டை குறிக்கிறது. ஏழாம் வசனத்தை பார்க்கும்போது, "யாக்கோபை" இஸ்ரவேல் நாடு  என்கிறார். [எப்பிராயீம் (இஸ்ரவேல் நாடு) தேவனோடுள்ள உறவுமுறைக்காக  குறிப்பிடப்படுகிறது]. 
கேள்வி 8: சங்கீதம் 2:7 - இந்த சங்கீதத்தில்  தாவீது தன்னை தேவன் பெற்றார் (ஜெநிப்பித்தார்) என்றுச் சொல்கிறார். தாவீதைப்போல,  இயேசுவும் தேவன் ஜெநிப்பிக்கப்பட்ட இன்னொரு குமாரன் என்று ஏன் கருதக்கூடாது.  
பதில் 8: இந்த சங்கீதத்தில் அனேக தத்துவங்கள் அடங்கியுள்ளன. தேவன் தாவீதை  குமாரன் என்று அழைப்பதை புரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், அக்காலத்தில் உருவகம்  எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை அறிந்துக்கொள்ளவேண்டும். அக்கால கிழக்கத்திய உறவு  முறைகளில், ஒரு பெரிய அரசன் மற்றும் அவனுக்கு கீழாக இருக்கும் குருநில அரசனுக்கும்  இடையே இருக்கும் உறவு முறை என்பது, எஜமான் மற்றும் வேலைக்காரன் என்ற உறவுமுறையோடு  மட்டும் நின்றுவிடாமல், தந்தை மகன் என்ற உறவுடனும் அழைக்கப்பட்டது. தாவீது,  எஜமானனாகிய தேவனின் ஊழியக்காரன் மற்றும் அதே நேரத்தில் தேவனின் "மகன்" ஆவார். இதனை  2 சாமுவேல் மற்றும் 1 நாளாகத்தில் நாம் காணலாம். 
கேள்வி 9: இயேசுவிற்கு  உலகப்படியான தந்தை இல்லை, ஆகையால் அவர் இறைக்குமாரன் என்றுச் சொன்னால், ஏன்  ஆதாமையும் நாம் இறைக்குமாரன் என்றுச் சொல்லக்கூடாது? 
பதில் 9: லூக்கா  3:38ன் படி, ஆதாம் தேவனின் குமாரன் என்று அழைக்கப்பட்டார். தேவன் படைத்த முதல்  மனிதன் ஆதாம் என்று எங்களுக்குத் தெரியும் (ஆதியாகமம் 5:1). ஆதாம் தேவன் படைத்த  முதல் மனிதனாக இருந்ததினாலே அவரை உருவகமாக தேவனின் குமாரன் என்று  அழைக்கப்படுகிறார். உபாகமம் 32:6ம் வசனத்தில் இந்த விவரம் தெளிவாக்கப்பட்டுள்ளது,  இந்த இடத்தில் தான் படைத்த தேவன் பிதாவாக சித்தரிக்கப்படுகிறார்.  
ஆதாமுக்கும் இயேசுவிற்கும் அனேக வித்தியாசங்கள் உண்டு, அவைகளில் ஒன்று,  ஆதாம் பாவியாக இருந்தார், ஆனால், இயேசு பாவம் செய்யவில்லை. ஆதாம் படைக்கப்பட்டார்  ஆனால், இயேசு தன்னைப் பற்றி கூறும் போது: "உலகம் உண்டாவதற்கு முன்பே தான் இருப்பதாக  கூறினார்" (யோவான் 17:5). இன்னும் அனேக வித்தியாசங்கள் உண்டு. இயேசு ஆதாமைப் போல  அல்லாமல் அவர் பலவகைகளில் வித்தியாசமானவர். 
கேள்வி 10: எபிரேயர் 7:3ஐ  பற்றி என்ன கூறுகிறீர்கள்? - "இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன்  நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், ...." என்று மெல்கிசேதேக்கு  பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், இயேசுவும் மெல்கிசேதேக்கைப் போல ஒரு  தேவகுமாரனாக ஏன் இருக்கமுடியாது. 
பதில் 10: மெல்கிசேதேக்கு பற்றிய இந்த  விவரங்கள் மிகவும் முக்கியமானவைகளாகும். மெல்கிசேதேக்கு என்பவர் யார் என்பதைப்  பற்றிய அனேக விளக்கங்கள் உள்ளன, ஆனால், எல்லா விளக்கங்களும் ஒன்றோடு ஒன்று  ஒத்துப்போவதில்லை. பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட மெல்கிசேதேக்கு கிறிஸ்து தான் என்று  சிலர் கூறுகின்றனர், இன்னும் சிலர் அவர் தேவனால் படைக்கப்பட்ட சிறப்புமிக்க ஒரு  நபர் என்று கூறுகிறார்கள். பைபிளில் மெல்கிசேதேக்கு உண்மையில் யார் என்று அறிய  அதிகமான விவரங்கள் இல்லை. ஆகையால், நான் கீழ்கண்ட முடிவிற்கு வருகிறேன்.  
என்னுடைய கருத்தின் படி, அவர் முழுமையான ஒரு மனிதனாக இருந்தார், பிறந்தார்  வாழ்ந்தார் மற்றும் மரித்தார் என்பதாகும். எபிரேய நிருப ஆக்கியோன், "இவன் தகப்பனும்  தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின்  முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும்  ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்" என்று சொல்லும் போது, மெல்கிசேதேக்கைப் பற்றி இரண்டு  வகையான விவரங்களைச் சொல்கிறார். 
1) இவரைப் பற்றிய வம்ச வரலாற்று விவரங்கள்  அல்லது பின்னணி விவரங்கள் எதுவும் தரப்படவில்லை. 
2) இவரது ஆசாரியத்துவம்  நிரந்தரமானது. எபிரேய நிருபம், மெல்கிசேதேக்கு என்பவர் ஒரு தெய்வீக அழிவில்லாத  மனிதர்/அரசர்/ஆசாரியர் என்று சொல்லவில்லை, அதற்கு பதிலாக பழைய ஏற்பாட்டில் வரும்  அனேக முக்கியமான் நபர்கள் பற்றிய பின்னணி விவரங்கள், வம்சா வழி விவரங்கள்  தரப்படுவது போல, இவருக்கு தரப்படவில்லை என்பதைச் சொல்கிறது.
கடைசியாக,  இயேசுவின் ஆசாரியத்துவம் மெல்கிசேதேக்கைப் போல நிரந்தரமானவது என்பதை எபிரேய நிருபம்  சொல்கிறது. 
இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், எபிரேய நிருபத்தின்  ஆசிரியர், இயேசுவின் தெய்வீகத் தன்மையையும், அவர் உண்மையாக யாராக இருக்கிறார்  என்பதை நிருபிப்பதற்காகவே இந்த நிருபத்தை எழுதியுள்ளார். எபிரேய நிருபத்தின்  சுருக்கம், இயேசுவின் உன்னத்தன்மை மற்றும் தேவனின் கிருபைக்கு மத்தியஸ்தராக இயேசு  வெளிப்படல் போன்றவற்றை சொல்கிறது. இந்த நிருபத்தின் முதல் அதிகாரம் இயேசுவின்  தனித்தன்மை வாய்ந்த குமாரத்துவத்தைப் பற்றி விவரிக்கிறது. இந்த எபிரேய நிருபம் மற்ற  எல்லா மனிதர்கள் மற்றும் தேவதூதர்கள் அனைவரையும்விட இயேசு எவ்விதம் உயர்ந்தவர்  சிறந்தவர் என்பதை காட்டுகிறது. 
கேள்வி 11: இயேசு உண்மையாகவே தேவகுமாரனாக  இருந்தால், ஏன் பிசாசுக்கள் அதைக் குறித்து சொல்லக்கூடாது என்று  கட்டளையிட்டார்(லூக்கா 4:41ஐ பார்க்கவும்). இப்படி அவர் கட்டளையிட்டதினால், அவர்  தேவகுமாரன் என்பதை மறுக்கிறார் என்பது விளங்குகிறதல்லவா? 
பதில் 11:  முதலாவதாக, இயேசு எந்த சமயத்திலும் தான் தேவகுமாரன் இல்லை என்று சொல்லவில்லை, அதனை  மறுக்கவும் இல்லை. மத்தேயு 26:63,64ம் வசனங்களில், பிரதான ஆசாரியர் கேள்வி  கேட்டபோது, அதற்கு இயேசு பதில் இவ்விதமாக அளித்தார்: 
".... அப்பொழுது,  பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை  எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன்  என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; ..." என்று கூறினார்.  
யோவான் 3:16ல், இயேசு தன்னைத் தானே ஒரு தனிச்சிறப்பு மிக்க குமாரன் என்று  குறிப்பிடுகிறார். 
இரண்டாவதாக, இயேசு தேவனுடைய குமாரன் என்பதை  பிசாசுக்களும் அறிந்திருந்தன. அவைகள் அவருக்கு கீழ்படிந்தன (மாற்கு 1:25).  
மூன்றாவதாக, இந்த நிகழ்ச்சி, இயேசு செய்த ஊழியத்தின் ஆரம்ப காலத்தில்  நடைபெற்றது. இயேசு தன்னுடைய நற்செயல்கள் மூலமாக தான் உண்மையான மேசியா (மஸிஹா)  என்பதை நிலைநாட்ட விரும்பினார். அந்த சமயத்தில் யூதர்கள் தங்களை ரோமர்களின்  ஆட்சியிலிருந்து விடுதலையாக்க மேசியா வர காத்திருந்தனர். ஆனால், இதனை இயேசு  செய்யப்போவதில்லை (இராணுவத்தின் மூலம் இரட்சிப்பை யூதர்களுக்கு தரப்போவதில்லை).  ஆனால், அதற்கு பதிலாக தன்னுடைய நற்செயல்கள் மற்றும் அற்புதங்கள் மூலமாக தான் மேசியா  என்பதை சாதாரண மக்கள் அங்கீகரிக்கவேண்டும் என்று விரும்பினார். நற்செயல்கள்  மூலமாகத் தான் மேசியா அறியப்படவேண்டும். இப்படிப்பட்ட ஆரம்பகால ஊழியத்தின்  நேரத்தில் பிசாசுக்கள் சத்தமிட்டு, இவர் தான் தேவகுமாரன் என்று அறிக்கையிட அவர்  விரும்பவில்லை. ஆனால், இதே நேரத்திலும், இயேசு தன் சீடர்களுடன் தனிமையாக பேசும்  போதும், மற்றும் சத்தியத்தை அறியவேண்டும் என்று விரும்புகின்ற  தனிமனிதர்களிடத்திலும், தான் தேவகுமாரன் என்பதை அவர் அங்கீகரித்தார், மறுக்கவில்லை  (பார்க்க யோவான் 3ம் அதிகாரம்). 
அதிகபடியான விவரங்கள்: இயேசு தன்னைத் தானே  தேவகுமாரன் என்று சொன்ன வசனங்கள், அல்லது பிதாவினால் "இவர் என் குமாரன்" என்றுச்  சொன்ன வசனங்கள் 
யோவான் 17:1-5 கவனிக்கவும்,  இயேசு கைது செய்யப்படுவதற்கு முன்பு செய்த விண்ணப்பம் இதுவாகும். உலகம் உண்டாவதற்கு  முன்பாக இயேசு தேவனோடு இருந்தார் என்று இயேசு இங்கு குறிப்பிடுகிறார்.  
யோவான் 5:18-27 இந்த வசனங்களில் இயேசு தான் தேவகுமாரன் என்று 10  முறை கூறுகிறார். 
யோவான் 8:36, யோவான் 10:36 மற்றும் யோவான் 11:4  
மத்தேயு 17:5 "இயேசு தன் குமாரன்” என்று தேவன் தாமே இங்கு  கூறுகிறார் 
மத்தேயு 22:2 இயேசு, தான் “ஒரு இராஜாவின் குமாரன்” என்று  உவமையாக கூறுகிறார். 
மத்தேயு 26:63, 64 இயேசு பிலாத்துவிடம் “தான்  தேவகுமாரன்” என்று பதில் அளிக்கிறார். 
லூக்கா 3:22 இயேசுவை தேவன்  தம்முடைய குமாரன் என்று அழைக்கிறார். 
லூக்கா 1:35 மரியாளிடத்தில்  பேசும் போது கூட, தேவ தூதன் "இவர், தேவனுடைய குமாரனாவார்" என்று கூறுகிறார்.  
ஒரு எடுத்துக்காட்டு: 
நம்முடைய நாடு ஒரு மனிதனால்  ஆளப்படுகின்றது, அவரை நாம் ஜனாதிபதி (பிரசிடென்ட்) என்கிறோம். இதே போல, அனேக  நிறுவனங்களின் தலைவர்கள் தனி மனிதர்களாக (ஆண்கள் (அ) பெண்கள்) இருக்கிறார்கள்,  அவர்களையும், நாம் பிரசிடென்ட் என்றே அழைக்கிறோம். இந்த இரண்டு வகையான  பிரசிடென்ட்களும் சமமானவர்களா? இல்லை. வெள்ளை மாளிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு  நபரைப் பார்த்து பிரசிடென்ட் என்றுச் சொன்னாலும், அதே போல ஒரு நிறுவனத்தில்  அமர்ந்திருக்கும் ஒருவரைப் பார்த்து பிரசிடென்ட் என்றுச் சொன்னாலும் இரண்டும்  ஒன்றா? இல்லை. அதாவது எபிசி நிறுவனத்தின் பிரசிடென்ட்க்கும், அமெரிக்க ஐக்கிய  நாட்டின் பிரசிடென்ட்க்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதா? ஆம் என்பது தான்  பதில். 
இதே போலத்தான், "தேவ குமாரன்" என்று பலருக்கு பைபிள் சூட்டும்  போதும், "தேவகுமாரன்" என்று இயேசுவை அழைக்கும் போதும், மிகப்பெரிய வித்தியாசம்  உள்ளது. 
முடிவுரை: 
பைபிள் அனேகரை தேவக்குமாரர்கள் என்று  உருவகமாக அழைப்பது உண்மை தான். ஆனால், இதே பொருளில் இயேசுவையும் அழைக்கிறது என்று  கருதுவது தவறாகும். வேத வசனங்களின் அடிப்படையில், உருவகமாக தேவகுமாரன் என்று  மற்றவர்களை அழைப்பதற்கும், அதே போல இயேசுவை தேவகுமாரன் என்று அழைப்பதற்கும்,  வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள உயரத்தின் அளவிற்கு வித்தியாசம் உள்ளது.  இயேசுவை தேவகுமாரன் என்று பைபிள் அழைப்பது போல, வேறுஒருவரையும் பைபிள் இப்படி  அழைப்பதில்லை. 
ஆங்கில மூலம்: JESUS IS THE UNIQUE SON  OF GOD 
சைலஸ் அவர்களின் இதர கட்டுரைகள் 

