இஸ்லாம் கிறிஸ்தவம் சின்னஞ் சிறு கேள்வி பதில்கள் - பைபிள் (421 - 430) - பாகம் 16

"சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000" தொடரின் முந்தைய பதிவுகளை இங்கு சொடுக்கி படிக்கலாம்.  இந்த தற்போதைய கட்டுரையில், "பைபிள்" என்ற தலைப்பில்  மேலும் 10 கேள்வி பதில்களைக் காண்போம்.


தலைப்பு: பைபிள் (கேள்விகள் 421 - 430) வரை

கேள்வி 421: நான் பைபிளை மூல மொழியில் படிக்காமல், தமிழில் படிப்பதினால் என் முஸ்லிம்கள் நண்பர் என்னை குற்றப்படுத்துகிறார். இதற்கு என்ன பதில் சொல்வது? 

பதில் 421: வேதங்களை மூல மொழியில் படிப்பதால் எந்த தவறும் இல்லை, ஆனால் அதனால் என்ன பயன்?

பைபிள் என்பது தேவன் நமக்காக கொடுத்திருக்கும் வேதம், அதனை படிக்கவேண்டும், கேட்கவேண்டும், கீழ்படியவேண்டும்.

நாம் வேதம் சம்மந்தப்பட்டு எதை செய்தாலும், அது நமக்கு புரியவேண்டும், கண்மூடித்தனமாக எதையும் செய்யக்கூடாது. 

வெளி  1:3. இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.

கீழ்படியவேண்டுமென்றால் புரியவேண்டுமல்லவா? புரியாமல் படித்தல் எப்படி கீழ்படியமுடியும்?

மூல மொழியில் படித்தால் தான் நல்லது என்று சொல்லும் வாதத்தில் உள்ள  வேடிக்கை என்னவென்றால், "கட்டளை இன்னதென்று புரியவில்லையென்றால் அதற்கு எப்படி கீழ்படிவது"? சுவரில்லாமல் சித்திரம் வரைய முயலும் மடமைக்கு சமமாகும் இது.

பைபிளின் மூல மொழிகளாகிய எபிரேயம், கிரேக்கம் போன்றவைகளை படிக்க மட்டும் கற்றுக்கொண்டு, பைபிளின் வசனங்களின் பொருளை புரிந்துக்கொள்ளாமல் படித்தால் ஒரு பயனும் இல்லை. மேலும், எல்லா மக்களுக்கும் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளை கற்றுக்கொடுக்க முயலுவது முட்டாள் தனமான செயலாகும். 

[யார் வேதாகம கல்லூரியில் படிக்கிறார்களோ, யாருக்கு எபிரேய, கிரேக்க மொழி கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆர்வமுள்ளதோ, அவர்கள் மூல மொழிகளை கற்பது நல்லது. ஆனால், சாதாரண மக்கள் மூல மொழியை நிச்சயம் கற்கவேண்டும் என்றுச் சொல்வது சரியானது அல்ல]

இந்த முட்டாள் தனத்தை சில பொய்யான மதங்கள் செய்கின்றன, உதாரணத்திற்கு, இஸ்லாமைச் சொல்லலாம், அரபியில் குர்‍ஆனை படித்தால் தான் நன்மை என்று இஸ்லாம் சொல்கிறது, இந்திய முஸ்லிம்களில் 99% சதவிகித முஸ்லிம்களுக்கு அரபி தெரியாது. இவர்களில் அனேகர் அரபியை படிக்க  மட்டும் கற்றுக்கொண்டு, குர்‍ஆனை படிக்கிறார்கள்.

கிறிஸ்தவம் உண்மையான மார்க்கம் ஆகும்.  நம் தேவனுக்கு உலகில் உள்ள அனைத்து மொழிகளும் தெரியும், அவரிடம் ஜெபிக்கும் போது, ஆராதிக்கும் போது நமக்கு என்ன மொழி தெரியுமோ அதனை  பயன்படுத்தினால் போதுமானது. 

எனவே, உங்கள் முஸ்லிம் நண்பரிடம் சென்று, "நாங்கள் தான் சரியான வழியில் வேதத்தை படிக்கிறோம், நீங்கள் செய்வது  தவறானது என்றுச் சொல்லுங்கள்".

குறிப்பு: எந்த உலக மதங்களில் மூல மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாதாரண மக்கள் கூட அதே மூலமொழியில் மந்திரங்களை, ஸூராக்களை ஓதினால் தான் அது சாமியைச் சென்று அடையும், அல்லாஹ்வை அடையும் என்று சொல்கிறார்கள், அம்மார்க்கங்களில் அனேக ஏமாற்றுவேலைகள் நடக்கும்.

அப்படிப்பட்ட மதங்களை பின்பற்றும் மக்கள் அறியாமையிலேயே இருப்பார்கள், கேள்வி கேட்கமாட்டார்கள். புரிந்தால் தானே மனிதன் கேள்வி கேட்பான், ஒன்றுமே புரியவில்லையென்றால், கேள்வி கேட்காமல், தலையாட்டிக்கொண்டே இருப்பான். இந்த நிலை கிறிஸ்தவத்தில் இல்லை.

பைபிள் போதிக்காத ஒன்றை ஒரு போதகர் போதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், உடனே அடுத்த நாளே யுடியூபில் அந்த போதகருக்கு எதிராக அனேக கேள்விகள் குவியும் ஏன்? என்று இப்போது புரிகின்றதா?

மேலும், அந்த கேள்விகளை கேட்பவர்கள் சாதாரண விசுவாசிகளாக இருப்பதற்கு காரணம்! நமக்கு தெரிந்த மொழியில் நம் வேதத்தை வாசிப்பதினால் தான். இஸ்லாமிலும் சரி, இந்து மதத்திலும் சரி, இது சாத்தியமில்லை ஏனென்றால், அனேகருக்கு சமஸ்கிருதமும், அரபியும் தெரியாமல் இருப்பது  தான்.

கேள்வி 422: பைபிள் விதியை ஆதரிக்கிறது என்று என் இஸ்லாமிய நண்பர் கூறுகிறார்? இது உண்மையா?

பதில் 422: ஒரு வார்த்தையில் இதற்கு பதில் சொல்வதாக இருந்தால், "பைபிள் விதியை நம்புவதில்லை, கிறிஸ்தவ  இறையியலில் விதி என்ற கோட்பாடு இல்லை" என்பதாகும். இஸ்லாம் விதியை நம்புவதினால்,  உங்கள் இஸ்லாமிய நண்பர் இப்படி சொல்கிறார். மேலும், பைபிளின் சில வசனங்களை தனியாக எடுத்து முஸ்லிம்கள் தங்களுக்கு ஏற்றபடி பொருள் கூறுவதினால், சாதாரண முஸ்லிம்கள் விதியை பைபிள் ஆதரிக்கிறது என்று தவறாக நம்பிவிடுகிறார்கள்.

தேவைப்படும் போது விதியைப் பற்றி வேறு கேள்விகளில் பதில்களை காண்போம்.

கேள்வி 423: பைபிள் மறுமணத்தை ஆதரிக்கிறதா?

பதில் 423: ஆம், பைபிள் மறுமணத்தை ஆதரிக்கிறது.

மறுமணம் என்று வரும் போது, அதற்கு முன்பாக இரண்டு காரியங்கள் நடந்திருக்கவேண்டும். முதலாவது திருமணம், அடுத்ததாக, விவாகரத்து அல்லது ஒரு துணையின் மரணம்.

a) விவாகரத்து நியாயமானதாக இருந்தால், மறுமணம் அனுமதிக்கப்பட்டதே:

இயேசு விவாகரத்து பற்றி மிகவும் கடினமாக கட்டளையிட்டார், அதாவது தம்பதிகளில் யாராவது  ஒருவர் இன்னொருவருக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்துவிட்டால் தான் விவாகரத்து செய்யவேண்டும், வேறு எந்த காரணத்திற்காகவும் விவாகரத்து செய்யக்கூடாது என்றார். தன் துணைக்கு  எதிரான நம்பிக்கை துரோகம் என்பது, “வேசித்தன பாவமாகும்”.

மத்தேயு 5:

31. தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்கு கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது.

32. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ் செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.

மேலே இயேசு சொன்ன வசனங்களில் அடங்கியிருக்கின்ற ஒரு சத்தியம் என்ன தெரியுமா?  விவாகரத்து நியாயமானதாக இருந்தால் (ஒருவர் தன் துணைக்கு எதிரான வேசித்தன பாவம் செய்திருந்தால்), விவாகரத்து பெறலாம் மற்றும் மறுமணமும் செய்யலாம் என்பதாகும். "பைபிளின் அடிப்படையில்" விவாகரத்து நடந்திருந்தால், மறுமணமும் அனுமதிக்கப்பட்டதே என்று இயேசு கூறுகின்றார்.

b) துணை மரித்துவிட்டால் மறுமணம் அனுமதிக்கப்பட்டதே:

மறுமணம் பற்றி மேலே கண்டது முதலாவது  காரணமாகும், இரண்டாவதாக, துணை மரித்துவிட்டால், அடுத்தவர் 'மறுமணம் செய்ய விடுதலையாக்கப்படுகின்றார்'. இதனை கீழ்கண்ட வசனங்களில் காணலாம்.

ரோமர் 7:

2. அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள்.

3. ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம்பண்ணினாலும் விபசாரியல்ல.

எனவே, கிறிஸ்தவத்தில் மறுமணம் தேவனால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: சில கிறிஸ்தவர்கள்,   ஒரு துணை மரித்துவிட்டால் அல்லது விவாகரத்து செய்துவிட்டால் மற்றவர்  திருமணம் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழவேண்டும் என்று போதிக்கிறார்கள். இந்த போதனை மேலேயுள்ள வசனங்களுக்கு எதிரானவைகளாகும்.  நான் மேலே காட்டிய வசனங்கள் புதிய ஏற்பாட்டிலிருந்து எடுத்தவைகள் என்பதை கவனிக்கவும். பழைய ஏற்பாட்டிலும் மறுமணம் உண்டு, ஆனால், புதிய ஏற்பாட்டில் இயேசு பல நிபந்தனைகளை திருமணம், விவாகரத்து மற்றும் மறுமணம் பற்றி சேர்த்துள்ளார். எனவே தான் புதிய ஏற்பாட்டிலிருந்து வசனங்களை மேற்கோள் காட்டினேன்.

கேள்வி 424: புதிய ஏற்பாட்டில் ஏன் பல புத்தகங்களுக்கு ஊர் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது?

பதில் 424: நான் முதன் முதலாக புதிய ஏற்பாட்டை படித்த காலத்தில் இதே சந்தேகம் எனக்கு வந்தது. 

புதிய ஏற்பாட்டின் சில புத்தகங்களுக்கு கொடுக்கப்பட்ட ஊர் பெயர்கள் பற்றி தெரிந்துக்கொள்ளும் இதே நேரத்தில், புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களின் பெயர்களையும் சிறிது அறிந்துக்கொள்ளலாம்.

கீழ்கண்ட அட்டவணையில், ஒவ்வோரு புதிய ஏற்பாட்டின் புத்தகத்தின் பெயர்க்காரணம் கொடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி 425: முஹம்மது தம் வாழ்நாளில் ஒருமுறையாவது தௌராத்தை (தோரா, ஐந்தாகமங்களை) பார்த்திருக்கிறாரா?

பதில் 425: ஆமாம், அபூ தாவூத் ஹதீஸின் படி, முஹம்மது தோராவை (தௌராத்தை) பார்த்து இருக்கிறார்.

முஹம்மது தோராவைப் பற்றி என்ன கருதுகின்றார் என்பதை கீழ்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சில  முஸ்லிம்கள், தோரா மாற்றப்பட்டுவிட்டது என்று தவறாக குற்றம் சாட்டுகிறார்கள், அப்படிப்பட்டவர்கள், முஹம்மது தோராவை எப்படி கையாண்டார் என்பதை முதலாவது தெரிந்துக் கொள்ளவேண்டும்.

முஹம்மதுவும் தோராவும்

சுனான் அபூ தாவுத் புத்தகம் 38 (கிதாப் அல் ஹுதுத், நிர்ணயிக்கப்பட்ட தண்டனைகள்), எண் 4434 (ஆங்கில எண்):

இப்னு உமர் அறிவித்ததாவது:

ஒரு குறிப்பிட்ட யூத குழுவினர் வந்து அல்லாஹ்வின் தூதரை (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) “குஃப்” என்ற இட்த்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். இறைத்தூதரும் அவர்களின் இடத்திற்கு (பள்ளிக்கு) சென்றார்.

அவர்கள் இறைத்தூதரிடம் “அபூல் காசிம் அவர்களே, எங்களைச் சார்ந்த ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு விபச்சாரம் செய்துவிட்டான், எனவே, அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டுமோ அதனை கொடுங்கள் என்று கேட்டார்கள். இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) உட்காருவதற்கு ஒரு மென்மையான மெத்தையை அவர்கள் போட்டு இருந்தார்கள், அதன் மீது இறைத்தூதர் உட்கார்ந்தார்கள், மேலும் “தோராவை கொண்டு வாருங்கள்” என்று இறைத்தூதர் கூறினார்கள். அவரிடம் தோரா கொண்டு வரப்பட்ட்து. அப்போது அவர் அந்த மெத்தையிலிருந்து எழுந்தார், மேலும் அந்த மெத்தையின் மீது தோராவை வைத்து, “நான் உன் (தோரா) மீது நம்பிக்கை கொள்கிறேன் மேலும் உன்னை அனுப்பியவர் மீதும் நம்பிக்கை கொள்கிறேன்” என்று கூறினார் (I believed in thee and in Him Who revealed thee).

அதன் பிறகு இறைத்தூதர் அவர்கள், உங்களில் படித்த ஒரு நபரை அழைத்து வாருங்கள் என்று கூறினார். ஒரு படித்த வாலிபர் கொண்டு வரப்பட்டார்.

நஃபியின் மாலிக் என்பவர் அறிவித்த கல்லெரிதல் தண்டனை போன்றதோரு விவரங்களே இந்த அறிவிப்பாளரும் இந்த ஹதீஸோடு அறிவித்தார்.

இந்த ஹதீஸின் படி, முஹம்மதுவின் காலத்தில் தோரா மாற்றப்படாமல் பாதுகாக்கப்பட்டு இருந்தது என்று தெரியவில்லையா?

இந்த ஹதீஸின் படி நாம் கீழ்கண்ட விவரங்களை அறிந்துக்கொள்கிறோம்:

1. முஹம்மது வாழ்ந்த காலத்தில், அதிகார பூர்வமான தோரா பரவலாக பயன்படுத்தப்பட்டு இருந்திருக்கின்றது. அன்று முஹம்மது அவர்களின் இருந்த பிரதியானது தங்களிடம் இருந்த பிரதிக்கு வேறுபடுகிறது என்றுச் சொல்லி யூதர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உண்மையைச் சொன்னால், இந்த தோரா பிரதியானது யூதர்களின் பிரதியாகவே இருந்திருக்கவேண்டும், ஏனென்றால், முஹம்மதுவோ அல்லது அவரது அரபி சகாக்களோ தோராவை படிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர். இந்த தோரா தான் இறைவனின் பிழையற்ற வார்த்தை. அல்லாஹ்வின் பிழையற்ற வார்த்தைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை (பார்க்க குர்-ஆன் 10:94).

2. தன்னிடம் கேள்வி கேட்ட போது முஹம்மது பரிசுத்த வேதத்தை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறினார், இது இக்கால இஸ்லாமியர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. மேலும் தான் உட்கார்ந்து இருந்த மெத்தையிலிருந்து எழுந்து, அந்த மெத்தையின் மிது தோராவை வைத்தார் என்பதை இங்கு கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயமாக இருக்கிறது. முஹம்மது செய்தது போலத் தான் ஒவ்வொரு உண்மையான முஸ்லிமும், அல்லாஹ்வின் முந்தைய வேதங்களை கனப்படுத்தவேண்டும்.

3. உங்கள் இறைத்தூதர் முஹம்மது இவ்விதமாக கூறினார்: “நான் உன் (தோரா) மீது நம்பிக்கை கொள்கிறேன் மேலும் உன்னை அனுப்பியவர் மீதும் நம்பிக்கை கொள்கிறேன்” (I believed in thee and in Him Who revealed thee) .

இந்த வார்த்தைகள் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வார்த்தைகளாக உள்ளது. அதாவது நாம் அனைவரும் பைபிளை விசுவாசிக்கவேண்டும். முஹம்மதுவின் உதாரணத்தை பின்பற்றவேண்டும் என்று நம்புகிற முஸ்லிம்கள் இப்படியே செய்யவேண்டும். இப்போது என்னிடம் “ஆனால், தீமோத்தேயு அவர்களே, இன்று நம்மிடம் அதிகார பூர்வமான தோரா இல்லையே” என்று அறியாமையில் என்னிடம் கேள்விகளை கேட்கவேண்டாம். ஏனென்றால், உங்கள் இறைத்தூதர் முஹம்மதுவிற்குக் தெரிந்ததை விட உங்களுக்கு அதிகமாக தெரியுமா? பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு வம்சமாக பாதுகாக்கப்பட்டு, தன்னுடைய காலத்தில் தன் கையில் கிடைத்த பரிசுத்த இறை வார்த்தைகள் பற்றி உயர்வாக பேசி உங்கள் முஹம்மது அவர்களே அவைகளை கனப்படுத்தியுள்ளார். அப்படி இருக்கும் போது, அவரை விட சிறந்தவர்களாக நீங்கள் உங்களை கருதுகிறீர்களோ? மேலும் தற்போது நம்மிடமுள்ள பிரதிகள், முஹம்மதுவின் காலத்தில் இருந்த பிரதிகளோடு ஒத்திருப்பதை நாம் அகழ்வாராய்ச்சி மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலமாக அறிந்துக்கொள்ளலாம்.

மூலம் : முஹம்மதுவும் தோராவும் - https://www.answering-islam.org/tamil/bible/mhd_torah.html

கேள்வி 426: முஹம்மது தம் வாழ்நாளில் ஒருமுறையாவது புதிய ஏற்பாட்டை  பார்த்திருக்கிறாரா?

பதில் 426: எனக்கு தெரிந்தவரை, முஹம்மது புதிய ஏற்பாட்டை பார்த்ததாக ஹதீஸ்களில் விவரங்கள் இல்லை.

ஆனால், முஹம்மது தாம் நபியாக நியமிப்பதற்கு முன்பு சிரியா போன்ற நாடுகளுக்கு வியாபார பயணம் பல முறை செய்துள்ளார். இந்த பயணங்களில் அவர் அனேக  கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் சந்தித்து இருந்துள்ளார். வாய் வழியாக பல பைபிளின் நிகழ்ச்சிகளை அவர் கேள்விபட்டு இருக்கிறார்.

அந்த பயணங்களின் போது, அவர் புதிய ஏற்பாட்டையோ, அல்லது அதன் சில புத்தகங்களையோ பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

முக்கியமாக, குர்‍ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ள பைபிளின் நிகழ்ச்சிகளை கவனித்தால், அவர் அனேக கட்டுக்கதைகளை, தள்ளுபடி ஆகமங்களின் கதைகளை கேட்டு இருக்கிறார் என்று உறுதியாகச் சொல்லமுடியும். இயேசு சிறுவனாக இருந்த போது, கலிமண்ணினால் ஒரு பறவையைச் செய்து, அதற்கு உயிர்க்கொடுத்த நிகழ்ச்சி, கி.பி. இரண்டாம் நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்ட கள்ள உபதேச கதையாகும், இதனை புதிய ஏற்பாட்டில் காணமுடியாது, ஆனால் 'தள்ளுபடி ஆகமங்களிலும், குர்‍ஆனிலும் காணலாம்'.

ஆகவே, ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகின்றது, அது என்னவென்றால், முஹம்மது புதிய ஏற்பாட்டை பார்த்தும் இருக்கலாம், பார்க்காமலும் இருந்திருக்கலாம், ஆனால் பல பைபிளின் நிகழ்சிகளை அவர் வாய் வழியாக கேட்டுள்ளார், மற்றும் தள்ளுபடி ஆகமங்களின் கதைகளை உண்மையென்றும் நம்பியுள்ளார்.

கேள்வி 427: இயேசுவிற்கு நீண்ட தலைமுடி உள்ளது போன்று வரைபடங்கள் மற்றும் இதர படங்களில் காட்டுகிறார்களே, இது உண்மையா?

பதில் 427: இல்லை, இது உண்மையில்லை.  இயேசுவின் உருவமும், அவரது வெளித்தோற்றமும் இன்னது என்று நற்செய்தி நூல்களில் எங்கும் காணமுடியாது.  

ஓவியர்கள் தோராயமாக இயேசுவின் வெளிப்புறத் தோற்றத்தை தங்கள் கற்பனையின் படி வரைந்துவிட்டு சென்றுவிட்டார்கள், ஆனால் இது பைபிளின் படி சரியானதல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பெரும்பான்மையாக நம்மைப்போன்று நன்றாக கட்டிங் செய்துக்கொண்டு டிப்டாப்பாக இருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் இப்படி வரைந்துவிட்டு சென்றுள்ளார்கள், அவ்வளவு தான்.

இயேசுவின் மற்றும் முஹம்மதுவின் வெளிப்புற தோற்றம் பற்றி ஒரு சிறிய கட்டுரையை கடந்த ஆண்டு எழுதியிருந்தேன், அதிலிருந்து ஒரு பகுதியை இங்கு பதிக்கிறேன்.

இயேசுவின் வெளித்தோற்றமும் கிறிஸ்தவர்களும்:

ஒரு கிறிஸ்தவனிடம் 'உங்கள் இயேசு என்ன உயரம்?' என்று கேட்டுப்பாருங்கள், "எனக்கு தெரியாது" என்று பதில் வரும்.

  • இயேசு என்ன கலர்? என்று கேட்டால், "எனக்கு தெரியாது" என்று பதில் வரும்.
  • இயேசுவின் கண்கள் எப்படி இருக்கும்? எனக்குத் தெரியாது.
  • இயேசுவின் முகம் எப்படி இருக்கும்? எனக்குத் தெரியாது.
  • இயேசு மீசை வைத்திருந்தாரா? எனக்குத் தெரியாது.
  • இயேசு தாடி வைத்திருந்தாரா? எனக்குத் தெரியாது.
  • இயேசுவின் பேச்சு எப்படி இருக்கும்? எனக்குத் தெரியாது.
  • இயேசு பொதுவாக எப்படி பேசுவார், சத்தம் உயர்த்தி பேசுவாரா? தாழ்த்திப் பேசுவாரா? எனக்குத் தெரியாது.
  • இயேசு எப்படி சாப்பிடுவார்? எனக்குத் தெரியாது.
  • இயேசு எப்படி தண்ணீர் குடிப்பார்? எனக்குத் தெரியாது

இயேசுவின் வெளித்தோற்றம் பற்றி எந்த கேள்வியைக் கேட்டாலும் எனக்குத் தெரியாது என்றுச் சொல்கிறீர்களே! கிறிஸ்தவர்களே! இயேசுவைப் பற்றி என்னத்தான் தெரியும் உங்களுக்கு!?

இயேசுவே வழியும், சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் என்றுத் தெரியும் என்று கிறிஸ்தவர்கள் பதில் சொல்வார்கள்.

முஹம்மதுவின் வெளித்தோற்றமும் முஸ்லிம்களும்:

ஒரு முஸ்லிமிடம் 'உங்கள் முஹம்மது என்ன உயரம்?' என்று கேட்டுப்பாருங்கள், உடனே அதற்கு பதில் வரும்.

  • முஹம்மது என்ன கலர்? என்று கேட்டால்? உடனே பதில் வரும்.
  • முஹம்மதுவின் கண்கள் எப்படி இருக்கும்? உடனே பதில் வரும்.
  • முஹம்மதுவின் முகம் எப்படி இருக்கும்? உடனே பதில் வரும்.
  • முஹம்மது மீசை வைத்திருந்தாரா? உடனே பதில் வரும்.
  • முஹம்மது தாடி வைத்திருந்தாரா? உடனே பதில் வரும்.
  • முஹம்மதுவின் பேச்சு எப்படி இருக்கும்? உடனே பதில் வரும்.
  • முஹம்மது பொதுவாக எப்படி பேசுவார், சத்தம் உயர்த்தி பேசுவாரா? தாழ்த்திப் பேசுவாரா? உடனே பதில் வரும்.
  • முஹம்மது எப்படி சாப்பிடுவார்? உடனே பதில் வரும்.
  • முஹம்மது எப்படி தண்ணீர் குடிப்பார்? உடனே பதில் வரும்.
  • முஹம்மது எப்போது வலதுகை பயன்படுத்துவார், எப்போது இடதுகை பயன்படுத்துவார்? என்று கேள்வி கேட்டால், உடனே பதில் வரும்.

இப்படி, முஹம்மதுவின் புறத்தோற்றம் மற்றும் அவருடைய அசைவுகள் அனைத்தையும் (நன்கு இஸ்லாமை அறிந்த) முஸ்லிம்கள் அறிவார்கள். அவர்கள் மிகவும் பெருமையாக, 'எங்கள் இறைத்தூதரின் ஒவ்வொரு அங்க அடையாளமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு நாங்கள் அவரின் உண்மை உருவத்தை வரைய‌ முடியும். இப்படிப்பட்ட விவரங்களை சரித்திரத்தில் வேறு எந்த நபர் பற்றியும் பதிவு செய்யப்படவில்லை.' என்றும் சொல்லுவார்கள்.

இயேசுவை நேசித்த  சீடர்கள் ஏன் அவருடைய அங்க அடையாளங்களை உலகிற்கு சொல்லாமல் சென்றுவிட்டார்கள்?

இயேசுவை தங்கள் உயிரினும் மேலாக நேசித்த சீடர்கள் ஏன் அவருடைய அங்க அடையாளங்களை, அவருடைய வெளிப்புற செயல்களைப் பற்றி நமக்குச் சொல்லவில்லை? யாராவது இப்படி செய்வார்களா? நான்கு நற்செய்தி நூல்களை எழுதியவர்களில் ஒருவர் கூடவா? இயேசுவின் வெளிப்புற தோற்றம் பற்றி எழுதவில்லை! ஆச்சரியமாக இருக்கிறது? இயேசுவிற்கு பிறகு அவருடைய‌ தாய் மரியாள், அனேக ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்கள். அவர்களிடம் இயேசுவின் குழந்தை மற்றும் இளமைப் பருவம் பற்றி பல கேள்விகளை சீடர்கள் கேட்டு பல சுவாரசியமான  விவரங்களை அறிந்துக்கொண்டு இருந்திருப்பார்கள். ஆனாலும், எந்த ஒரு சுவிசேஷத்திலும் அவருடைய‌ குழந்தை பருவத்தின் விவரங்களை எழுதவில்லை. ஏன் இப்படி தங்களுக்கு தெரிந்திருந்த செய்திகளையும் சீடர்கள் எழுதவில்லை?

இயேசுவின் நற்செய்தி முக்கியத்துவம் பெறவேண்டுமே ஒழிய, அவரின் அங்க அடையாளங்கள் அல்ல:

மக்கள் இரட்சிக்கப்படுவதற்கு அவர்களுக்கு என்ன வேண்டும்? இயேசுவின் நற்செய்தியா? போதனையா? அல்லது  அவரின் அங்க அடையாளங்களா? பரிசுத்த ஆவியானவர் சீடர்களைக் கொண்டும், அவர்களின் சீடர்களைக் கொண்டும் புதிய ஏற்பாட்டை எழுதும் போது, இயேசுவின் உலக சரீரத்தைப் ப‌ற்றிய அங்க அடையாளங்களை எழுத விரும்பவில்லை, அதனை அவர் தடுத்துவிட்டார்.

எந்த மனிதனானாலும் சரி, தான் உயிரினும் மேலாக நேசிக்கும் குருவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை எழுதும் போது, அவரது அங்க அடையாளங்கள், அவரது பழக்கங்கள் போன்றவற்றைப் பற்றி நிச்சயம் எழுதுவார். ஆனால், இயேசுவின் விஷயத்தில் மட்டும் ஒரு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களில், பல்லாயிரக்கணக்கான வசனங்களில் ஒரு இடத்திலும் அவரது தோல் கலர், உயரம், முகம் போன்ற எந்த அடையாளத்தையும் எழுதவில்லை. இது தான் புதிய ஏற்பாடு வேதம் என்பதற்கு இன்னொரு நிரூபனம். இயேசு தன்னைப் பற்றி இப்படியெல்லாம் எழுதவேண்டும் என்று விரும்பவில்லை, அவைகள் உலக மக்களுக்குத் தேவையும் இல்லை என்பதை அவர் உணர்ந்திருந்ததால், அதனை தடுத்துப்போட்டார்.

இயேசு தன் வெளிப்புற தோற்றத்தை மக்கள் அணுவணுவாக பின்பற்றாம‌ல், தான் காட்டிய வழியில் நடக்கவும், தான் போதித்த சத்தியத்தை பின்பற்றவும், அதன் மூலம் தான் கொடுக்கும் ஜீவனை பெறவுமே இயேசு விரும்பினார்.

மேற்கண்ட கட்டுரையின் தொடர்ச்சியை இந்த தொடுப்பில் படிக்கவும்:  https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2019ramalan/2019-ramalan-6.html

கேள்வி 428: ஆண் நபிகளை மட்டுமே அல்லாஹ் அனுப்பியதாக குர்‍ஆன் சொல்கிறது, ஆனால் பைபிளில் பெண் நபிகள் கூட இருப்பதாக கேள்விப்பட்டேன், இது எப்படி சாத்தியமாகும்?

பதில் 428:  இதற்கான பதிலை ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளேன், அதனை இங்கு பதிக்கிறேன்.

குர்‍ஆனை மொழியாக்கம் செய்பவர்கள், குர்‍ஆனின் பலவகையான பிழைகளை மறைப்பதற்காக, அரபி மூலத்தில் சொல்லப்பட்டதற்கு மாற்றமாக மொழியாக்கம் செய்வதை நம்முடைய கட்டுரைகளில் நாம் எடுத்துக்காட்டுகிறோம். இந்த சிறிய கட்டுரையில் குர்‍ஆனின் 21:7ம் வசனத்தை ஆய்விற்காக எடுத்துக்கொள்வோம்.

இக்கட்டுரையின் தலைப்புக்கள்:

1) ஐந்து தமிழாக்கங்களில் குர்‍ஆன் 21:7 (மற்றும் 12:109 & 16:43) வசனங்கள்

2) அரபி மூலத்தில் குர்‍ஆன் வசனங்கள்  - ரிஜாலன் மற்றும் நாஸ்

3) அல்லாஹ் ஆண்களையே நபிகளாக அனுப்பினானா?

4) முந்தைய வேதங்கள் என்ன சொல்கின்றன? யெகோவா தேவன் பெண் நபிகளை அனுப்பியுள்ளாரா?

5) குர்‍ஆன் மொழியாக்கங்களில் ஏன் இந்த வித்தியாசங்கள்

6) முடிவுரை


1) ஐந்து தமிழாக்கங்களில் குர்‍ஆன் 21:7 (மற்றும் 12:109 & 16:43) வசனங்கள்

முதலாவது, குர்‍ஆன் 21:7ம் வசனத்தை ஐந்து தமிழாக்கங்களில் படிப்போம். ஏதாவது ஒரு மொழியாக்கத்தை எடுத்துக்கொண்டு கிறிஸ்தவர்கள் விளக்கமளிக்கிறார்கள் என்று முஸ்லிம்கள் குற்றம்சாட்டக்கூடாது என்பதற்காக, ஐந்து தமிழாக்கங்களில் இவ்வசனத்தை படிப்போம்.

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

21:7. (நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை; அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே “(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்” (என்று நபியே! அவர்களிடம் கூறும்).

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

21:7. (நபியே!) உங்களுக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறொருவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை. (உங்களுக்கு அறிவிப்பது போன்றே நம்முடைய கட்டளைகளை) அவர்களுக்கும் வஹீ (மூலம்) அறிவித்தோம். ஆகவே, (இவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்: இது) உங்களுக்குத் தெரியாதிருந்தால் முன்னுள்ள வேதத்தை உடையவரிடத்தில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

21:7. மேலும் (நபியே!) உமக்கு முன்னரும் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பியுள்ளோம். அவர்களுக்கும் நாம் வஹி அருளியிருந்தோம். நீங்கள் ஞானமற்றவர்களாயிருந்தால் வேதம் அருளப்பட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

21:7. மேலும், (நபியே!) உமக்கு முன்னரும் (மனிதர்களிலிருந்து) ஆடவர்களையே அன்றி, வேறெவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை, (உமக்கு அறிவிக்கிற பிரகாரமே) அவர்களுக்கு நாம் வஹீ அறிவித்தோம், ஆகவே, (இவர்களிடம் நீர் கூறுவீராக! இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேதத்தை) அறிந்தோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

பிஜே தமிழாக்கம்: 

21:7. (முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம்.239 அவர்களுக்கு தூதுச்செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!

இந்த ஐந்து தமிழாக்கங்கள் ஒரே விதமாக இவ்வசனத்தை விளக்கவில்லை. கீழே கொடுக்கப்பட்ட  அட்டவணையில், இதனை  தெளிவாக காணலாம்.

எண் தமிழாக்கம்அல்லாஹ் யாரை தூதர்களாக அனுப்பினான்?
1டாக்டர். முஹம்மது ஜான் மானிடர்களையே
2அப்துல் ஹமீது பாகவி ஆண்களையே 
3இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)மனிதர்களையே 
4மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)ஆடவர்களையே
5பிஜே தமிழாக்கம்ஆண்களையே

இதே விவரத்தை குர்‍ஆன் 12:109 & 16:43 வசனங்களிலும் காணலாம்.

கவனிக்கவும்: அப்துல் ஹமீது பாகவி, சௌதி தமிழாக்கம் & பீஜே தமிழாக்கம் போன்றவைகளில் 'அல்லாஹ் ஆண்களை தூதர்களாக அனுப்பினான்' என்று உள்ளது. மீதமுள்ள இரண்டு தமிழாக்கங்களில் 'மானிடர்கள்' என்ற வார்த்தையை பயன்படுத்தி, ஆண்கள் பெண்கள் இருபாலாரிலும் அல்லாஹ் தூதர்களை அனுப்பியதாக பொருள்படும் படி செய்துள்ளார்கள். இவர்கள் ஏன் இப்படி 'மனிதர்கள்/மானிடர்கள்' என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள்? அரபி மூலத்தில் என்ன உள்ளது? 

2) அரபி மூலத்தில் குர்‍ஆன் வசனங்கள்  - ரிஜாலன் மற்றும் நாஸ்

அரபி மூலத்தில் இந்த வசனத்தில் "ஆண்கள் (அரபி - ரிஜாலன்)" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால், தமிழாக்கங்களில் "மானிடர்கள் (அரபி -  நாஸ்)" என்ற சொல்லை வேண்டுமென்றே பயன்படுத்தியுள்ளார்கள். ஒட்டுமொத்த  மானிடவர்க்கத்தை (மனிதகுலத்தை) குறிக்க அரபியில் 'நாஸ்' என்ற வார்த்தை உள்ளது.

தமிழ் வார்த்தைஅரபி வார்த்தை
ஆண்கள்ரிஜாலன் 
மானிடர்கள்நாஸ்

குர்‍ஆன் 21:7 அரபி  மூலம்:

 

அரபியில் குர்‍ஆன் 21:7 -  வமா அர்ஸல்னா கப்லகா இல்லா ரிஜாலன் . . .

மூலம்: http://corpus.quran.com/wordbyword.jsp?chapter=21&verse=7

குர்‍ஆனின் 114வது அத்தியாயத்திற்கு “ஸூரத்துந் நாஸ்” என்று பெயர்.   இதன் பொருள் மனிதர்கள், மானிடர்கள் என்பதாகும். இதில் ஆண் பெண் அனைவரும் அடங்குவார்கள்.

3) அல்லாஹ் ஆண்களையே நபிகளாக அனுப்பினானா?

இதுவரை கண்ட  விவரங்களிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக புரிகின்றது, அதாவது, குர்‍ஆனை தமிழாக்கம் செய்தவர்களில் சிலர் “ஆண்கள் (ரிஜாலன்)” என்று வரும் மூல  வார்த்தையை மாற்றி, “மானிடர்கள்/மனிதர்கள் (நாஸ்)” என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். 

ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள்? என்று சிந்திக்கும் போது, பெண்களிலும் தூதர்களை அல்லாஹ் அனுப்பியிருக்கின்றான்,  ஆனால் இந்த வசனம் தவறாக  உள்ளது,  எனவே, 'ஆண்கள்' என்று உள்ளதை, மானிடர்கள் என்று மாற்றி மொழியாக்கம் செய்வோம் என்று எண்ணி இதனை  செய்துள்ளார்கள். 

குர்‍ஆனின் அரபி மூலத்தின் படி, அல்லாஹ் ஆண்களையே தன் தூதர்களாக அனுப்பியிருக்கின்றான் என்று பொருள் வருகிறது. இதனை பிஜே போன்றவர்கள் விளக்கங்கள் கொடுக்கும் போது, குறிப்பிட்டுள்ளார்கள்.

பிஜே தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் வசனம் 21:7, விளக்க குறிப்பு 239ல், இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏன் அல்லாஹ் ஆண்களை மட்டுமே தூதர்களாக அனுப்பினான், பெண்களை ஏன் அனுப்பவில்லை என்று தன்னால் முடிந்த விளக்கத்தை கொடுத்துள்ளார்.

பிஜே தமிழாக்க விளக்கம் 239. பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?

// இறைத்தூதுப் பணி மிகவும் கடினமான பொறுப்பாகும். இப்பொறுப்பை நிறைவேற்றுவது ஆண்களில் கூட அனைவராலும் சாத்தியமாகாததாகும்.

இறைத்தூதராக அனுப்பப்படுவோர் தமது சமூகத்தில் இருந்த அத்தனை கொள்கை கோட்பாடுகளையும் தனியொருவராக நின்று எதிர்க்க வேண்டும்.

  • அவ்வாறு எதிர்க்கும்போது கொல்லப்படலாம்!
  • நாடு கடத்தப்படலாம்!
  • கல்லெறிந்து சித்திரவதை செய்யப்படலாம்!
  • ஆடையைக் கிழித்து நிர்வாணப்படுத்தப்படலாம்!

இன்னும் சொல்லொணாத் துன்பங்களை அவர்கள் அனுபவித்து ஆக வேண்டும்.

பெண்களாக இருந்தால் இவை அனைத்துக்கும் மேலாக அவர்களிடம் பாலியல் பலாத்காரம் செய்து மேலும் துன்புறுத்துவார்கள்.

ஒட்டுமொத்த சமுதாயத்தையே தன்னந்தனியாக களத்தில் நின்று எதிர்ப்பதால் ஏற்படும் சிரமங்களை எந்தப் பெண்ணாலும் நிச்சயம் தாங்கிக் கொள்ளவே முடியாது. //

உண்மையாகவே, ஆண்களையே அல்லாஹ் தூதர்களையே அனுப்பினானா? என்று சந்தேகம் வந்தால் என்ன செய்வது? இதற்கு அதே 21:7ம் வசனம் பதில் தருகின்றது. 

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

21:7. மேலும், (நபியே!) உமக்கு முன்னரும்) மனிதர்களிலிருந்து) ஆடவர்களையே அன்றி, வேறெவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை, (உமக்கு அறிவிக்கிற பிரகாரமே) அவர்களுக்கு நாம் வஹீ அறிவித்தோம், ஆகவே, (இவர்களிடம் நீர் கூறுவீராக! இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேதத்தை) அறிந்தோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

அதாவது குர்‍ஆனில் சந்தேகம் வந்தால், முஸ்லிம்கள் யாரிடம் சென்று தெரிந்துக்கொள்ளவேண்டும்? முந்தைய வேதங்கள் கொடுக்கப்பட்ட யூதர்களிடமும், கிறிஸ்தவர்களிடம் சென்று தெரிந்துக்கொள்ளவேன்டும். முஹம்மதுவிற்கும் சந்தேகம் வந்தாலும் சரி, அவர் யூத கிறிஸ்தவர்களிடம் வரவேண்டியது தான்.

முஹம்மது ஜான் தமிழாக்கம்:

10:94. (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.

சரி, இப்போது நாம் முந்தைய வேதங்களில் பெண் தூதர்கள் பற்றி என்ன உள்ளது என்பதை அறிவோம்.

4) முந்தைய வேதங்கள் என்ன சொல்கின்றன? யெகோவா தேவன் பெண் நபிகளை அனுப்பியுள்ளாரா?

இந்த ஆய்வுக் கட்டுரையை படிப்பவர்கள், ஒரு விவரத்தை தெளிவாக புரிந்துக்கொள்வார்கள், அது என்னவென்றால், குர்‍ஆனின் அல்லாஹ்வும், பைபிளின் யெகோவா தேவனும் வெவ்வேறானவர்கள் என்பதைத் தான். அல்லாஹ் மூன்று இடங்களில், நான் ஆண்களை மட்டுமே தூதர்களாக அனுப்பினேன் என்று கூறுகின்றான், ஆனால் பைபிளின் தேவனோ, அனேக பெண் தீர்க்கதரிசிகளை, தூதர்களை அனுப்பியுள்ளார். இவ்விருவர்களும் எப்படி ஒருவராக முடியும்? ஒருவேளை, அல்லாஹ்விற்கு கடந்த கால நிகழ்ச்சிகளை மறந்துபோகும் வியாதி இருந்ததா? என்று கேட்கத்தோன்றுகிறது. அப்படி இல்லையென்றால், ஏன் அல்லாஹ் குர்‍ஆனில் வெறும் ஆண்களையே தூதர்களாக அனுப்பினேன் என்றுச் சொல்லமுடிந்தது? அல்லாஹ் மறந்தானா? அல்லது மறைத்தானா?

  • அல்லாஹ் இறைவன் என்றால் அவனால் மறக்கமுடியுமா? முடியாது
  • அல்லாஹ் தான் யெகோவா என்றால், எப்படி தான் பெண் தீர்க்கதரிசிகளை அனுப்பியதை மறைத்து, குர்‍ஆனில் எழுதமுடியும்?
  • இதுவும் இல்லை, அதுவும் இல்லையென்றால், என்ன தான் பதில்? 

இதற்கு பதில் சொல்வது மிகவும் சுலபம், அதாவது அல்லாஹ் யெகோவா தேவன் இல்லை என்பது தான் அது. இவ்விருவரும் நேர் எதிர் துருவங்கள். இது சரியான பதில்  இல்லையென்றுச் சொல்லும் முஸ்லிம்களிடம் வேறு பதில் உண்டா? 

[யூதர்கள் பைபிளை மாற்றிவிட்டார்கள் என்றுச் சொல்லி, உங்கள் முட்டாள்தனத்தை வெளியே காட்டிவிடாதீர்கள் முஸ்லிம்களே! தோராவில் மரியாம் என்ற மோசேயின் சகோதரி ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லி 2000 ஆண்டுகளுக்கு பிறகு தான் குர்‍ஆன் என்ற ஒன்று உலகில் வருகிறது. இப்படிப்பட்ட சரித்திர மற்றும் கால இடைவெளியை கவனத்தில் கொண்டு பதில் அளிக்கவேண்டும் முஸ்லிம்களே!]

பைபிளிலிருந்து சில பெண் தீர்க்கதரிசிகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவைகளுக்கான  வசன ஆதாரங்களையும் தருகிறேன், இவைகளை படித்த பிறகு குர்‍ஆன் 21:7ஐ படியுங்கள். உண்மையை புரிந்துக்கொள்ளுங்கள்.

பெண் நபி 1:  மிரியாம்

யாத்திராகமம் 15:20 

20. ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

பெண் நபி 2:  தெபொராள்

நியாயாதிபதிகள் 4:4

4. அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.

பெண் நபி 3:  உல்தாள்

II இராஜாக்கள் 22: 13 -15 & 2 நாளாகமம் 34:21-22

13. கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.

14. அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் குமாரனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்.

15. அவள் அவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவரிடத்தில் நீங்கள் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்:

பெண் நபி 4:  ஏசாயாவின் மனைவி ஒரு தீர்க்கதரிசி

ஏசாயா 8:3

3. நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பேரை அவனுக்கு இடு.

எபிரேய மொழியை ஆய்வு செய்தவர்களின் கூற்றின்படி, ஏசாயாவின் மனைவி கூட ஒரு தீர்க்கதரிசி தான். ஏசாயா  என்பவர் ஒரு தீர்க்கதரிசி என்பதால், அவரது மனைவி சாதாரண பெண்ணாக இருந்தால், அவரையும் தீர்க்கதரிசி என்று பைபிள் அழைக்கவில்லை.  உண்மையாகவே, அந்தப்பெண் தீர்க்கதரிசியாக இருந்தபடியினால் இங்கு இப்படி குறிக்கப்பட்டுள்ளது.

பெண் நபி 5:  அன்னாள் 

லூக்கா 2:36-38

36. ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.

37. ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.

38. அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.

பெண் நபி 5:  இயேசுவின் சீடர் "பிலிப்புவின் மகள்கள்"

அப்போஸ்தலர் 21:9

 9. தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.

பெண் நபி 6:  புதிய ஏற்பாட்டு பெண் தீர்க்கதரிசிகள்

I கொரிந்தியர் 11:5:

5. ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.

குறிப்பு:  தீர்க்கதரிசனம் சொல்லும் போது பெண்கள் தலையை மூடவேண்டும் என்று இந்த வேதவசனம் கூறுகிறது. இதன் அர்த்தமென்ன? பெண் தீர்க்கதரிசிகள் திருச்சபைகளில் உண்டு என்பதாகும். பெண்கள் தலைமுடியை மூடாமல் ஜெபம் அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கும் போது, அவர்களின் தலைமுடி காற்றில் ஆடும்  போது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது என்பதற்காக இப்படி தலையை மூடுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் மூலமாக கர்த்தர் சொல்லும் தீர்க்கதரிசனங்களை  மக்கள் கூர்ந்து  கேட்பார்களா அல்லது அவர்களது தலைமுடி காற்றில் இங்கும் அங்கும் ஆடுவதை பார்ப்பார்களா? எனவே தான் இந்த ஆலோசனை.

தீர்க்கதரிசி (நபி) இஸ்லாமிலும் கிறிஸ்தவத்திலும்:

இஸ்லாமில் தீர்க்கதரிசி என்றுச் சொன்னால், அவர் கீழ்கண்டவைகளைச் செய்வார்:

  • மக்களை எதிர்த்து தீர்க்கதரிசனம் உரைப்பார், தன் செய்தியைச் சொல்வார்.
  • தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்தி சண்டை போடுவார்
  • முஹம்மதுவைப் போன்று ஆட்களை சேர்த்துக்கொண்டு வேறு நாட்டவர் மீது யுத்தம் செய்வார். இஸ்லாமை ஏற்கமறுத்தால் யுத்தம், இஸ்லாமுக்கு  அடிபணிந்தால் இஸ்லாமிய  ஆட்சிக்கு கட்டவேண்டும்.
  • அதாவது ஒரு தீர்க்கதரிசி என்றால் சண்டை போடுவது கட்டாயமாக இருக்கும். இதற்கு  சிறந்த உதாரணம், இஸ்லாமிய நபியாகிய முஹம்மது தான்.

ஆனால், பைபிளின் படி தீர்க்கதரிசி என்றால் சண்டை போடுபவர் அல்ல. அவர் கர்த்தரின் வார்த்தைகளை தன் நாட்டு மக்களுக்கு, தன் ஊராருக்கு, தன் சபைக்குச் சொல்பவர் அல்லது சொல்பவள். பழைய ஏற்பாட்டில் சில நேரங்களில் மட்டுமே அவர் கர்த்தரின் திட்டத்தின் படி யுத்தத்தில் ஈடுபடுவார், மற்ற நேரங்களில் அவர் ஒரு சாதாரண மனிதராக மக்களுக்கு எச்சரிக்கை செய்தியை கொடுப்பார். இதைப் பற்றி தேவைப்படும் போது  தனி கட்டுரையாக காண்போம்.

5) குர்‍ஆன் மொழியாக்கங்களில் ஏன் இந்த வித்தியாசங்கள்

முஸ்லிம் அறிஞர்களில் சிலர் முந்தையை வேதங்களை ஓரளவிற்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள், குர்‍ஆன் 21:7ம் வசனத்தை  மொழியாக்கம் செய்யும் போது, அவர்கள் மனதுக்கு அது உறுத்தும் ஒன்றாக இருக்கும். இது  எப்படி சாத்தியம்? முந்தைய  வேதங்களை கொடுத்தவர்  அல்லாஹ் என்றுச் சொன்னால், அவர் எப்படி குர்‍ஆனில் வெறும் ஆண்களை  மட்டுமே நான் தூதர்களாக அனுப்பினேன் என்றுச் சொல்லமுடியும் போன்ற‌ கேள்விகள் அவர்களுக்கு எழும்.

  • இந்த தர்மசங்கட சூழ்நிலையில் அவர்களால் என்ன செய்ய முடியும்? 
  • முந்தைய வேதங்களை கொடுத்தவர் அல்லாஹ் இல்லை என்றுச் சொல்லமுடியுமா?
  • அல்லாஹ்வும் யெகோவா தேவனும் வெவ்வேறானவர்கள் என்று சொல்லமுடியுமா?
  • தங்கள் மனசாட்சிக்கு எதிராக‌ 'ஆண்களை' மட்டுமே அல்லாஹ் தூதர்களாக அனுப்பினான் என்று தமிழாக்கம் செய்யமுடியுமா?

எனவே, 'ஆண்கள் (ரிஜாலன்)' என்ற வார்த்தைக்கு பதிலாக, மானிடர்கள் (நாஸ்) என்ற வார்த்தையை எழுதி கைகழுவிவிட்டார்கள், முஸ்லிம் அறிஞர்கள்.

6) முடிவுரை:

இதுவரை நாம் குர்‍ஆன் 21:7ம் வசனத்தை தமிழாக்கங்களிலும், அரபி மூலத்திலும் ஆய்வு செய்தோம். 

குர்‍ஆனை தமிழாக்கம் செய்தவர்களில் சிலர் 'ஆண்கள்' என்ற வார்த்தையை 'மானிடர்' என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். முந்தைய வேதங்களை ஓரளவிற்கு அவர்கள் அறிந்தபடியினால், இந்த காரியத்தை அவர்கள் செய்தார்கள்.

இது உண்மையானால், 

1) முந்தைய வேதங்களில் பெண் தீர்க்கதரிசிகளையும் அல்லாஹ் அனுப்பியுள்ளான் என்றுச் சொல்வது  பொய்யா? 

2) அல்லாஹ் முந்தைய வேதங்களை அனுப்பவில்லையா?

3) ஒருவேளை அல்லாஹ்விற்கு  ஞாபக‌ மறதியா? தன்னுடைய முந்தைய செயல்களை மறந்துவிட்டானா? 

4) ஏனென்றால், இந்த விஷயத்தில் (ஆண்களை தூதர்களாக அனுப்பிய விஷயத்தில்) சந்தேகம் இருந்தால், பைபிளை அறிந்தவர்களிடம் கேட்டு தெளிவு பெறும்படி ஏன் அல்லாஹ் அதே வசனத்தில் சொல்கிறான்?

5) உண்மையாகவே, குர்‍ஆன் 21:7ம் வசனத்தை கொடுத்தவனுக்கு முந்தைய வேதம் பற்றி தெரியவில்லை என்று தானே அர்த்தம்.

6) ஒருவேளை, 2000 ஆண்டுகளுக்கு பிறகு முஹம்மது என்பவர் வந்து, குர்‍ஆன் 21:7ல், ஆண்களை மட்டுமே அல்லாஹ் தூதர்களாக  அனுப்பினான் என்ற வசனம் வரும் என்று யூதரகள் அறிந்துக்கொண்டு மூஸாவின் காலத்திலேயே பெண் தீர்க்கதரிசிகளையும் தௌராத்தில் (ஐந்தாகமங்களில்) சேர்த்துவிட்டார்களா? இதே போல கிறிஸ்தவர்களும் செய்தார்களா? என்னே ஒரு ஞானம்! யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இருக்கும் ஞானத்துக்கு முன்பாக அல்லாஹ்வின் ஞானம் ஒன்றுக்கும் உதவாது என்றுச் சொல்லத்தோன்றுகிறது.

குர்‍ஆனின் குழப்பத்திற்கும், குர்‍ஆன் 21:7ல் வரும் சரித்திர பிழைக்கும் முஸ்லிம்கள் பதில்களைச் சொல்ல  கடமைப்பட்டிருக்கிறார்கள். தங்கள் கடமையைச் செய்வார்களா? முஸ்லிம்கள்.

மூலம்: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/quran-21-7-allah-sent-only-men.html

கேள்வி 429: பைபிளின் 400 அமைதி ஆண்டுகள் என்கிறார்களே, இது என்ன?

பதில் 429: பைபிள், பழைய ஏற்பாடு என்றும், புதிய ஏற்பாடு என்றும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். இவ்விரு பிரிவுகளுக்கு இடையே 400 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. அதாவது பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகத்திற்கு பிறகு, 400 ஆண்டுகள் தேவன் ஒரு தீர்க்கதரிசியையும் எழுப்பவில்லை, அதன் பிறகு புதிய ஏற்பாட்டில் முதன் முதலாக யோவான் ஸ்நானகன் வருகின்றார்.

பழைய ஏற்பாடு கடைசியாக கீழ்கண்ட வசனத்தால் முடிவடைகிறது, அது ஒரு எதிர்ப்பார்ப்போடு முடிகிறது:

மல்கியா 4:5-6

5 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.

6 நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.

மேசியாவின் வருகைக்கு முன்பு எலியா போன்றதொரு தீர்க்கதரிசியை அனுப்பப்படுவதாக, இந்த வசனம் கூறுகிறது. இதன் படியே, யோவான் ஸ்நானகன் வந்தார், அதன் பிறகு மேசியாவாகிய இயேசு வந்தார்.

அந்த 400 ஆண்டுகளில் (Inter-Testamental Period) பல காரியங்கள் இஸ்ரவேலில் நடந்தன.

1) இந்த காலத்தில் பெர்சியர்கள், கிரேக்கர்கள், கடைசியாக ரோமர்கள் இஸ்ரவேலை ஆட்சி செய்தார்கள், பல எதிர்ப்புக்கள் எழும்பின, கலவரங்கள் நடந்தன.

2) கிரேக்க மொழி யூதர்களிடையே பரவியது, இதன் தாக்கத்தால் பழைய ஏற்பாடு முழுவதும் எபிரேய மொழியிலிருந்து கிரேக்கத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது, இதனையே செப்டாஜிண்ட் மொழியாக்கம் என்பார்கள்.

3) இந்த கால கட்டத்தில் (கி.மு. 400 to 100 ) எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் தான், சவக்கடல் குகைகளில் 1945ம் ஆண்டுகளில் கண்டெடுக்கப்பட்ட "சவக்கடல் சுருள்கள்" ஆகும்.

4) பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள் என்ற யூத பிரிவுகள் இந்த காலத்தில் தான் உண்டானது.

இன்னும் பல சரித்திர நிகழ்வுகள் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு கால இடைவெளியில் நடந்தன.

கேள்வி 430: வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் புதிய ஏற்பாட்டில் இருப்பதினால் என்ன நன்மை?

பதில் 430: வெளிப்படுத்தின விசேஷம் என்ற புத்தகம் பைபிளின், புதிய ஏற்பாடின் கடைசி புத்தகமாகும்.  இது உலக கடைசியில் நடக்கவிருக்கும் காரியங்களைப் பற்றி பேசுகின்றது.  பைபிளின் முத்திரையாக இப்புத்தகம் அமைந்துள்ளது, அதாவது இதன் பிறகு வேறு ஒரு வேதமோ, கோட்பாடுகளோ, மதங்களோ வரவேண்டிய அவசியமில்லை என்று இது சொல்கிறது. இதில் சொல்லப்பட்ட விவரங்கள் விடுகதைகளாக உவமைகளாக‌ அல்லது நேரடியாகச் சொல்லாமல், மறைமுகமாக விஷயங்களை சொல்வது போன்று அமைந்துள்ளது.

இயேசுவின் இரண்டாம் வருகைப் பற்றியும், உலகத்தின் முடிவு பற்றியும், நியாயத்தீர்ப்பு பற்றியும் இது பேசுகின்றது. சுருக்கமாகச் சொல்வதென்றால், பைபிளின் முதல் புத்தகமாகிய "ஆதியாகமம்" புத்தகத்தில் சொல்லப்பட்ட கேள்விகளுக்கு பதில் இப்புத்தகத்தில் கிடைக்கும்.

  • 'பாவம்' முதன் முதலாக நுழைவது பற்றி ஆதியாகமத்தில் படிக்கலாம், வெளிப்படுத்தின விசேஷத்தில், அந்த 'பாவம்' நிவர்த்தி ஆனது பற்றி பார்க்கலாம்.
  • ஆதியாகமத்தில் தொடங்கப்பட்ட தேவ குடும்பத்தின் கதையின் க்ளைமாக்ஸ் இந்த புத்தகத்தில் காணலாம்.
  • ஆதியாகமத்தில் வானமும் பூமியும் படைக்கப்பட்டதை படிக்கலாம், இந்த புத்தகத்தில் புதிய வானம் புதிய பூமி படைக்கப்பட்டது பற்றி காணலாம்.
  • ஆதியாகமத்தில் முதல் ஆதாமின் தோல்வியை பார்க்கலாம், இந்த புத்தகத்தில் இரண்டாம் ஆதாமாகிய இயேசுக் கிறிஸ்துவின் வெற்றியைக் காணலாம்.
  • பரலோகம் மற்றும் நரகத்தைப் பற்றிய சிறு குறிப்பும் இந்த புத்தகத்தில் காணமுடியும்.

இப்படி இன்னும் பல விவரங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம்.

குர்‍ஆனை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளாததற்கு அனேக காரணங்கள் உண்டு, அவைகளில் இந்த புத்தகம் ஒரு காரணமாகும்.

ஒரு நபர் புதிய ஏற்பாட்டை முழுவதுமாக படித்து வந்து, கடைசியாக இந்த புத்தகத்தையும் (வெளிப்படுத்தின விசேஷம்) படித்துவிட்டால், அதன் பிற்கு அவர் கீழ்கண்டவைகளை நம்பமாட்டார்.

1) ஒரு புதிய வேத புத்தகத்தை அவர் ஏற்கமாட்டார், ஏனென்றால், மனிதனின் மரணத்திற்கு பிறகு நடக்கும் நியாயத்தீர்ப்பு விவரங்கள் அனைத்தும் இந்த புத்தகத்தில் இருப்பதினால், இன்னொரு வேதம் புதிதாக வந்து புதிய ஒன்றை சொல்லத் தேவையில்லை. எனவே, குர்‍ஆனை வேதம் என்று கிறிஸ்தவர்கள் ஏற்பதில்லை.

2) புதிய நபியையும் (தீர்க்கதரிசியையும்) நம்பமாட்டார். இந்த புத்தகத்தின் படி, இன்னொரு சுவிசேஷம் தேவையில்லை, இதுவே அனைத்து நபிமார்களுக்கும் முத்திரையாக உள்ளது. இதனால் தான் முஹம்மதுவை நபி என்று கிறிஸ்தவர்கள் நம்புவதில்லை.

தேதி: 26th Sep 2020


சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்