ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்

தலைப்பு: முஸ்லிமிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

மெயில் பெற்றுக்கொண்ட நாள்: 24 ஏப்ரல் 2005

பொருள்: ஆய்வு செய்ய உதவி தேவை

முதலாவதாக, உங்களுடைய இந்த அருமையான தளத்திற்காக என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான் பைபிள் கலாசாலையில் மாணவனாக இருக்கிறேன். உலக மதங்கள் பற்றிய பாடத்தை எடுத்துள்ளேன், இப்போது அதைப் பற்றிய ஒரு ஆய்வு செய்யவுள்ளேன். இஸ்லாம் பற்றி அதிகமாக நான் அறிந்துக்கொள்ள உங்களின் தளம் மிகவும் உதவியாக உள்ளது.  இந்த தளத்தில் உள்ள கட்டுரைகளும், இதர தொடுப்புகளும் மிகவும் நன்றாக உள்ளது.  உங்களுடைய அயராத  உழைப்பிற்காகவும், பைபிள் சம்மந்தப்பட்ட பதில்களுக்காகவும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலே நான் குறிப்பிட்ட பாடத்திட்டத்தின் ஒரு பாகமாக,  நான் ஒரு ஆய்வு செய்யவேண்டும். அதாவது, கிறிஸ்தவம் பற்றி முஸ்லிம்களின் தவறான கண்ணோட்டத்தை அவர்கள் மாற்றிக் கொள்ள அவர்களுக்கு உதவியாக இருப்பதற்கு, மூன்று சவால்களை அல்லது கேள்விகளை அவர்களிடம் கேட்கவேண்டும். உங்களிடம் நான் கேட்கும் உதவி என்னவென்றால்: ஒரு இஸ்லாமிய சகோதரர் அல்லது சகோதரியிடம் சுவிசேஷத்தைச் சொல்லிவிட்ட பிறகு, அவர்கள் ஒரு நல்ல முடிவை எடுக்கும் படி, அவர்களிடம் கேட்கவேண்டிய மூன்று முக்கியமான கேள்விகள் அல்லது சவால்கள் எவை?  எனக்கு இருக்கின்ற குறைவான அறிவினால்,   நான் ஏதாவது தவறான கேள்விகள் கேட்டு, அவர்களை காயப்படுத்திவிடுவேனோ என்று எனக்கு பயமாக உள்ளது.   எனவே உங்களிடம் உதவி கேட்கிறேன்.

இஸ்லாமியர்களிடம் கேட்கவேண்டிய மூன்று கேள்விகளை, எனக்கு நீங்கள் கொடுத்து உதவினால் மிகவும் நன்றாக இருக்கும், உங்களால் உதவமுடியுமா?

உங்கள் தளத்திற்காக மறுபடியும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

த….


எங்களுடைய பதில்:

அன்பான சகோதரர் அவர்களே,

உங்களுக்கு எங்கள் தளம் உதவியாக இருக்கிறது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதாவது உங்கள் கேள்வி இது தானே: முஸ்லிம்கள் கிறிஸ்தவம் பற்றி கொண்டுள்ள தவறான மற்றும் எதிர்மறையான கருத்துக்களை  அவர்கள் மறுபரிசீலனை செய்ய தூண்டும் படி, சிந்திக்க வைக்கும் படி, நாம் கேட்க வேண்டிய மூன்று கேள்விகள் என்னென்ன?

அனேகர் வேறு வகையான கேள்விகள் கேட்கும்படி உங்களுக்கு அறிவுரை சொல்லலாம். ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் நான் கீழ்கண்ட மூன்று கேள்விகளை கேட்க விரும்புவேன்.

1. பைபிள் திருத்தப்பட்டது என்ற இஸ்லாமிய குற்றச்சாட்டைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது யாரால், எப்போது நடந்தது என்று உங்களால் சரியாக கூறமுடியுமா? 

இந்த கேள்வி மிகவும் முக்கியமான கேள்வியாகும். முஹம்மது குர்-ஆனை ஓதிக்காண்பித்த காலத்தில், பைபிள் திருத்தப்படவில்லை என்பது பற்றிய தெளிவான குர்-ஆன் வசனங்களை அவர் ஓதிக்காண்பித்தார். மேலும் பைபிள் திருத்தப்பட்டது என்று அவர் நம்பவில்லை என்பதை இதன் மூலமாக நாம் முஸ்லிம்களுக்கு தெளிவை உண்டாக்க முடியும். கிறிஸ்தவர்கள் தங்களிடம் உள்ள வேதத்தின் படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று குர்-ஆன் கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிடுகிறது.  யோவான் ஸ்நானகனுக்கும், இயேசுவிற்கும் அல்லாஹ் தோராவை கற்றுக்கொடுத்தார் என்று குர்-ஆனில் வசனங்கள் உண்டு.  குர்-ஆனின் இந்த வசனம் உண்மை என்று நாம் கருதினால், முதல் நூற்றாண்டில் தோரா கறைப்படுத்தப்படாமல் இருந்தது என்று அர்த்தமாகிறது.  நம்மிடம் இன்று சவக்கடல் சுருள்கள் உள்ளன, அதோடு கூட யோவான் ஸ்நானகன் மற்றும் இயேசுவின் காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு மொழியாக்கம் செய்யப்பட்ட செப்டாஜிண்ட்  என்ற சுருள்களும் உள்ளது.  ஆகையால், உண்மைகளை சரி பார்த்து தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆவல் உள்ளவர்களுக்கு இந்த விவரங்கள் உதவியாக இருக்கும்.  குர்-ஆன் சொல்லும் விவரங்களின் படியும், நம்மிடம் உள்ள கைப்பிரதி சுருள்கள் ஆதாரங்களின்படியும் பார்த்தால், பைபிள் கறைப்படுத்தப்படுவது என்பது முடியாத காரியமாகும்.  இப்படி அனேக தர்க்கரீதியான கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம். மேலும் அதிகபடியான விவரங்களுக்கு கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

www.answering-islam.org/Bible/multi.html

www.answering-islam.org/Bible/Text/wijngaards.html

www.answering-islam.org/Bible/jrwhy.html

எனக்கு பிடித்த இரண்டாவது கேள்வி “தேவன் மனிதனாக வந்தார்” என்பதைப் பற்றி முஸ்லிம்கள் கொண்டிருக்கும் தவறான கண்ணோட்டம் பற்றியதாகும்.  தேவன் தம்முடைய அன்பை காட்டும்படி, மனிதனாக வந்து, நமக்காக சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்த நிகழ்ச்சி, “இறைவனுடைய மேன்மைக்கு இழுக்கை உண்டாக்கும்” என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இதைப் பற்றி நான் அவர்களிடம் கேட்க விரும்பும் இரண்டாவது கேள்வி இவ்விதமாக இருக்கிறது.

2. தத்துவ ரீதியாக கேட்டால் எது உயர்ந்தது? தன்னுடைய அன்பை மிகவும் உயர்ந்த வகையில் வெளிப்படுத்திய இறைவனுடைய செயலா (பைபிளின் தேவன்) ? (பார்க்க பிலிப்பியர் 2ம் அதிகாரம்) அல்லது தன்னுடைய கௌரவத்தை காத்துக்கொள்ள தன் அன்பை வெளிக்காட்டாத இறைவனா (அல்லாஹ்)? 

இயேசுக் கிறிஸ்துவின் மனித அவதாரம் பற்றியும், அவரது தியாக பலி பற்றியும் நாம் முஸ்லிம்களின் கண்ணோட்டத்தில்  பார்த்தால், இது ஒரு உபயோகமில்லாத ஒன்றாக தெரியும்.  ஆனால், இதையே  நாம் சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசுவின் தியாக பலியை நாம் மெச்சிக்கொள்ளாமல் இருக்கமுடியாது. இறைவன் உலகம் உண்டானது முதல்  இதுவரை செய்த அனைத்து செயல்களைக்காட்டிலும், இதுவே மிகவும் மேன்மையான செயலாக இருக்கும். இறைவன் நம் மீது வைத்த அன்புக்காக எவ்வளவு பெரிய செயலை செய்துள்ளார் என்பதை முஸ்லிம்கள் காணுவார்களானால், அவர்களால் உண்மையான இறைவனை கண்டுக்கொள்ளமுடியும்.  பைபிளின் தேவனுக்கும், இஸ்லாமிய இறைவனுக்கும் இடையே இருக்கும் அதிமுக்கியமான வித்தியாசம், இந்த அன்பின் செயலில் தான் அடங்கியிருக்கிறது. இதைப் பற்றி மேலும் அறிய இந்த பதிலை படிக்கவும், இதில் இரண்டு தகப்பன்மார்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது. 

முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய அடுத்த கேள்வி:

3.   நீங்கள் பாவ சுபாவம் இல்லாமல் பிறந்தீர்கள் என்றுச் சொல்வீர்களானால், எத்தனை நாட்கள் இப்படி பாவம் செய்யாமல் இருப்பீர்கள்? பாவமில்லாமல் ஒரு வாரம் இருப்பீர்களா? அல்லது ஒரு நாள் பாவமில்லாமல் இருப்பீர்களா? நீங்கள் பிறந்தபோதே அடிப்படையிலேயே நல்ல சுபாவத்தோடு இருந்தால், ஏன் மீதமுள்ள நாட்கள் நல்லவர்களாக இருக்க அதிகமாக முயற்சி எடுக்கவேண்டும்? இயற்கையாகவே ஏன் நாம் பாவத்தின் பக்கமே சாய்கிறோம், நீதியின் பக்கம் அதிகமாக ஈர்க்கப்படுவதில்லை?

இந்தத் தலைப்பு பற்றி இக்கட்டுரையில் ”www.answering-islam.org/Intro/discussion.pdf” தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 

நான்காவது கேள்வி:

நீங்கள் திறந்த மனதுடன் இறைவனிடம் ”இறைவா! உன்னுடைய சத்தியத்தை நான் அறிய எனக்கு வழி காட்டுவாயாக. அந்த சத்தியம் இஸ்லாமில் இல்லாமல் பைபிளில் இருந்தாலும் சரி, எனக்கு வழி காட்டுவாயாக” என்று வேண்டுதல் செய்வீர்களா?

இந்த விவரங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். முஸ்லிம்களை சிந்திக்கத்தூண்டுகின்ற வகையில் உங்கள் கேள்விகளை  கேளுங்கள். இப்படி கேள்விகள் கேட்பதினால், முஸ்லிம்கள்  துக்கப்படுவார்களோ என்று நீங்கள் அஞ்சத்தேவையில்லை. அவர்கள் எப்படி நம்மிடம் கேள்விகளை தைரியமாக கேட்கிறார்களோ அதே போல நாமும் கேட்கலாம். மலைமீது கட்டப்பட்ட பட்டணத்தை மறைக்கமுடியாது. எனவே, நம்முடைய கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து பற்றிய இறைச் செய்தியை அவர்களுக்குத் தெரிவிக்க நாம் வெட்கப்படக்கூடாது. இவரைப் பற்றி அனேக தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனங்களாக அறிவித்துள்ளார்கள். இயேசுவின் மூலமாக நமக்கு இரட்சிப்பு கிடைத்துள்ளது, அதே போல, அவர் செய்துமுடித்த இரட்சிப்பு காரியத்தின் மீது நம்பிக்கை வைக்கின்ற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். 

மேலும், நாம் கேட்கும் சிந்திக்கத்தூண்டுகின்ற கேள்விகள் சில வேளைகளில் அவர்களுக்கு துக்கத்தை  உண்டாக்கினாலும், அவைகளினால் அவர்கள் தூண்டப்பட்டு பிறகு ஆய்வு செய்து, இதன் மூலம் அவர்கள் சத்தியத்தை அறிந்து இரட்சிக்கப்பட அவைகள் உதவியாக இருக்கும்.

உங்களுக்கு வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், எங்களுக்கு எழுத தயங்க வேண்டாம்.

இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

இப்படிக்கு,

லாசரஸ்

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Emails/good_questions.htm

இதர ஈமெயில் உரையாடல்களை இங்கு படிக்கவும்.